ஹைகோர்ட்டுக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு நீட்டிப்பா.. திங்கள்கிழமை தெரியும்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பை நீட்டிப்பது தொடர்பான வழக்கை வரும் திங்கட்கிழமை விசாரிப்பதாக பொறுப்பு தலைமை நீதிபதி தெரிவித்திருக்கிறார்
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு தொடர்பான அந்த கால அவகாசம் என்பது நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த மாதம் 31ஆம் தேதி பாதுகாப்பு கால அவகாசம் முடிவடைகிறது.
இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வினீத்கோத்தாரி, நீதிபதி சரவணன் அமர்வு முன்பு மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபால் ஆஜராகி, வருகிற 31-ஆம் தேதியுடன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு காலவகாசம் முடிவடைகிறது என்றும் எனவே பாதுகாப்பு நீடிப்பது தொடர்பான சூமொடோ வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து நீதிபதிகள் வருகிற திங்கட்கிழமை அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர். மாவட்ட நீதிமன்றங்களிலும் சிஐஎஸ் எப் காவல்துறை பாதுகாப்பு கேட்கப்படுவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.