வட கிழக்கு பருவமழை காலம்... அரசு டாக்டர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் -சுகாதாரத்துறை
சென்னை: வடகிழக்கு பருவமழை காலத்தில் அரசு மருத்துவர்கள் எந்த இடத்திலும் பணியாற்ற தயாராக இருக்குமாறு பொது சுகாதாரத்துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியிருப்பதால் டெங்கு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கான பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறையினர் கூடுதலாக மழைக்கால நோய்களையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வடகிழக்கு பருவமழை காலத்தில் அரசு மருத்துவர்கள் எந்நேரமும், எந்த இடத்திலும் பணியாற்றுவதற்கு தங்களை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் மருத்துவமனைகளில் எந்நேரமும் மின் தடை ஏற்படாத வண்ணம் ஜெனரேட்டர் வசதியை உருவாக்க வேண்டும், மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் இருக்கிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாவட்டந்தோறும் மாவட்ட பொதுசுகாதாரத்துறை துணை இயக்குநர் தலைமையில் கட்டுப்பாட்டு மையம் அமைத்து பொதுமக்களுக்கு மருத்துவ உதவிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் அரசு மருத்துவர்களுக்கு இப்போது மழைக்கால நோய்களுக்கான சிகிச்சை தர வேண்டிய சவால் உருவாகியுள்ளது.