சாலை விபத்து.. துடித்த வாலிபர்.. தனது காரில் ஏற்றிச் சென்று மருத்துவமனையில் சேர்த்த அமைச்சர் மா.சு
சென்னை: பூந்தமல்லியில் சாலை விபத்தில் சிக்கிய வாலிபரை மீட்டு தனது காரில் அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர் மீது கார் மோதியதில் அந்த நபர் கீழே விழுந்து காயங்களுடன் சாலையில் கிடந்துள்ளார்.
இதையடுத்து வாகன ஓட்டிகள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
சார்பட்டா பரம்பரையில் வரும் டான்ஸிங் ரோஸ்தான் ஜெயக்குமார்.. மா சுப்பிரமணியன் கிண்டல்!
பார்த்த அமைச்சர்
அதேநேரம், ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆன நிலையில் அந்த வழியாக கிருஷ்ணகிரி சென்றுகொண்டிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் விபத்தில் வாலிபர் சிக்கி வலியால் துடித்து கொண்டு இருப்பதை கண்டுள்ளார். உடனே யோசிக்காமல் காரை சாலையின் ஓரமாக நிறுத்த கூறியுள்ளார்.
வாலிபரை காரில் அழைத்துச் சென்ற அமைச்சர்
இதையடுத்து காரை விட்டு கீழே இறங்கிய அமைச்சர், பாதிக்கப்பட்ட நபருக்கு முதலுதவி அளித்தார். மேலும் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் தனது காரிலேயே பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு காயமடைந்த நபரை அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அந்த வாலிபர் அனுப்பி வைக்கப்பட்டார்.
வேலையை முடித்து வீடு திரும்பியுள்ளார்
காயமடைந்த நபர் பூந்தமல்லி மேல்மா நகரை சேர்ந்த ராஜேந்திரன் (23), என்பதும் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்ததும் வீட்டிற்கு செல்லும்போது விபத்தில் சிக்கியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் சிக்கிய நபரை அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர். ஆனால் உதவவில்லை.
அமைச்சரின் மனித நேயம்
அதேநேரம், விபத்தில் சிக்கிய நபருக்கு அமைச்சர் தனது காரிலேயே அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி முடியும் வரை அங்கேயிருந்து பார்த்துள்ளார் மா.சுப்பிரமணியன். இந்த காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்டதால் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமைச்சரின் மனித நேயத்தை அனைவரும் பாராட்டுகிறார்கள்.