முன்வாசல் ரமணா.. பின்வாசல் விஜயபாஸ்கர்.. நிறைய டவுட் வருதே!
சென்னை: பிவி ரமணா முன்வாசல் வழியாகவும், அமைச்சர் விஜயபாஸ்கர் பின்வாசல் வழியாகவும் சிபிஐ ஆபீசில் ஆஜரானதே பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
குட்கா வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவுக்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் சிபிஐ 3 தினங்களுக்கு முன்பு சம்மன் அனுப்பியது. இதில் இருவருமே ஆஜராவார்கள் என சொல்லப்பட்டது.
அதேபோல பிவி ரமணா முதல் நாளில் பிற்பகலில் ஆஜரானார். அதேபோல, இதற்கு முன்பு சிபிஐ அனுப்பிய சம்மனுக்கு விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை என்பதால் அன்றைய தினம் மாலை விஜயபாஸ்கர் கண்டிப்பாக ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது.
வாடகை கார்
அதன்படியே செய்தியாளர்களும் நுங்கம்பாக்கம் சிபிஐ ஆபீசில் காத்திருந்தனர். ஆனால் பிறகுதான் தெரியவந்தது, பிவி ரமணாக்கு முன்பே விஜயபாஸ்கர் அங்கு ஆஜராகி இருந்தார் என்பது. இப்படியேதான் 3 நாளும் வந்து போயிருக்கிறார். சிபிஐ ஆபீசுக்கு எப்போது வந்தார், எப்போது போனார் என்றுகூட தெரியவில்லை. அதுவும் அமைச்சர் அவரது சொந்த காரில் வரவில்லை, வாடகை காரில் வந்துபோனதாக கூறப்படுகிறது.
ஏன் தவிர்க்க வேண்டும்?
குட்கா வழக்கில் அன்று சோதனை நடந்தபோது, "என்ன வந்தாலும் எதிர்கொள்வேன், வழக்கை சட்டப்படி சந்திப்பேன்" என்று செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், எதற்காக இப்படி 3 நாளும் தவிர்க்கிறார்? எதற்காக மறைவாக விசாரணைக்கு வந்து போக வேண்டும் என்று தெரியவில்லை.
கூடுதல் பொறுப்பு
அதேபோல, அன்று குட்கா ஊழல் சோதனை நடந்தபோது, உடனடியாக விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும், அல்லது முதல்வர் அவரை பதவி இழக்க செய்ய வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் அறிக்கைகளை விடுத்தனர். இதனால் எந்நேரமும் அவர் பதவி விலகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்வரை தனியாக சென்று பார்த்து பேசிவிட்டு வந்தார் அமைச்சர். அதன்பிறகு பதவி விலகல் குறித்த பேச்சுகூட வராமல் போய்விட்டதுடன், கட்சியில் ஒரு பொறுப்பும் கூடுதலாக தரப்பட்டுவிட்டது.
முதல்வர் முடிவு?
இப்போது சிபிஐ விசாரணை நடக்கும்போதும், முதல்வரை நேற்று சந்தித்து பேசியுள்ளார் விஜயபாஸ்கர். என்ன பேசினார் என்று இதுவரை தெரியவில்லை. ஆனால் அதிமுகவை பொறுத்தவரை அன்றைக்கு இருந்த நிலைமை இன்று வேறு சூழ்நிலையை எதிர்நோக்கி உள்ளது. நிறைய குழப்பங்கள், சவால்கள், என அனைத்தையும் வென்றாக வேண்டிய கட்டாயத்திலும், ஆட்சியை தக்க வைக்கும் போராட்டத்திலும் உள்ளது.
பிடி இறுகுகிறதா?
எனவே ரகசியமாக விசாரணைக்கு வந்து போன, அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பிடி இறுக தொடங்கினால், முதல்வர் என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பார் என தெரியவில்லை. கட்சியை பார்ப்பாரா? ஆட்சியை பார்ப்பாரா? மக்களின் மனநிலையை பார்ப்பாரா? என்பதெல்லாம் இனிதான் தெரியவரும்.