தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு உருமாறிய கொரோனா... மொத்த பாதிப்பு 4 ஆக உயர்வு!
சென்னை: தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் 4 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியைக் குறிப்பிட்ட தட்பவெப்பத்தில் பாதுகாப்பதற்கான குளிர்சாதன வசதியுடன் கூடிய 2,880 மையங்கள் உள்ளன என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார்.
மழைக்காலம் என்பதால் தமிழகத்தில் ஆங்காங்கே டெங்கு காய்ச்சல் உள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
குளிர்சாதன வசதி
சென்னையில் நேற்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசியதாவது:-
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியைக் குறிப்பிட்ட தட்பவெப்பத்தில் பாதுகாப்பதற்கான குளிர்சாதன வசதியுடன் கூடிய 2,880 மையங்கள் உள்ளன. விமானத்திலிருந்து கொண்டு வரப்படும் தடுப்பூசி மாநில, மாவட்டங்களுக்கு வந்தபின்பு, குக்கிராமங்களுக்கு அனுப்புவதற்கான மையங்கள் இவையாகும்.
24 பேருக்கு தொற்று
தடுப்பூசி போடுவதற்கான பயிற்சிகள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. மத்திய அரசிடம் தடுப்பூசி போடுவதற்கான ஊசிகள், சிரிஞ்ச் கேட்டிருக்கிறோம். நாங்களும் ஊசிகள், சிரிஞ்ச் தயார் நிலையில் 17 லட்சம் வைத்துள்ளோம். இதுவரை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து 2,146 பேர் வந்திருக்கின்றனர். அவர்களில் 24 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிப்பு 4 ஆக உயர்வு
அவர்களுடன் தொடர்பில் இருந்த 3,321 பேரைப் பரிசோதித்திருக்கிறோம். அதில், 20 பேருக்குத் தொற்று உள்ளது. அவர்களுக்கு சாதாரண தொற்றுதான் ஏற்பட்டுள்ளது. மரபியல் ரீதியாக ஆய்வு செய்ய புனே, பெங்களூரு ஆகியவற்றுக்கு அவர்களின் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. இதில் 12 பேரின் முடிவுகள் வந்துள்ளன. இதில் 3 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே அறிவித்த ஒருவருடன் மேலும் 3 பேருக்கு ஏற்பட்டுள்ளதால், உருமாறிய கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 4 ஆக உயர்ந்துள்ளது. அனைவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு கிங் இன்ஸ்டிட்யூட்டில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பீதி அடைய வேண்டாம்
உணவகங்களில் கரோனா தொற்று பரவுவதாக மக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை. உணவகங்களில் பரிசோதிக்கப்பட்டதில் 2.7 சதவீதத்துக்கும் கீழ்தான் தொற்று விகிதம் உள்ளது. கடந்த 4-5 நாட்களில் 8,449 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில், 4,211 முடிவுகள் வந்துள்ளன. 15-ம் தேதியிலிருந்து 166 பேருக்குத்தான் குறிப்பிட்ட உணவகத்தில் தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று 5-6 பேருக்குத்தான் ஏற்பட்டுள்ளது. தேவையற்ற பீதி வேண்டாம். குறிப்பிட்ட தொழில்துறையை வைத்து பதற்றமடைய வேண்டாம்.
எச்சரிக்கை வேண்டும்
தமிழகத்தில் 900க்கும் கீழ்தான் தினமும் கொரோனா தொற்று பதிவாகிறது. சென்னையில் 250க்கும் குறைவாக உள்ளது. தொடர்ந்து பரிசோதனை நடத்தப்படுகிறது. 'வாக்-இன்' (Walk-in) பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மழைக்காலம் என்பதால் டெங்கு விழிப்புணர்வும் இருக்க வேண்டும். ஆங்காங்கே ஓரிருவருக்குத்தான் டெங்கு காய்ச்சல் உள்ளது என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.