தமிழகத்தை விட்டு கொரோனா இன்னும் போகல; அலட்சியமாக இருக்காதீங்க... சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை!
சென்னை: தமிழகத்தை விட்டு கொரோனா இன்னும் போகவில்லை. எனவே மக்கள் அலட்சியத்தை கைவிட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு விழிப்புடன் இருக்குமாறு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.
பஸ்ஸில் பயணம் செய்பவர்கள், ஓட்டல்கள், புத்தக கண்காட்சியில் கூட பெரும்பாலும் முகக்கவசம் அணிவதில்லை என்றும் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் பாதிப்பு குறைவு
இந்தியாவில் நமது அண்டை மாநிலமான கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகமாக இருந்து வருகின்றன. ஆனால் தமிழகத்தில் ஓரளவு கொரோனா கட்டுப்பாட்டில் இருந்து ஆறுதல் அளித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது கொரோனா இல்லை என்ற அஜாக்கிரதையான எண்ணம் இருக்கும் வர வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
75 சதவீதம் பேருக்கு தடுப்பூசி
இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- தமிழகத்தில் சுகாதாரப் பணியாளர்கள் 75 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். முன்களப் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
கோவையில் பாதிப்பு அதிகரிப்பு
சென்னையில் உள்ள 39 ஆயிரம் தெருக்களில் 1,000 தெருக்களில்தான் 5 முதல் 6 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லை. இனிமேல் நமக்கு பிரச்சினை இல்லை என்ற எண்ணம் யாருக்கும் வர வேண்டாம்.
அலட்சியம் கூடாது
முகக்கவசம் அணியாமலும்,தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்குதான் தொற்று அதிகம் ஏற்படுகிறது. பஸ்ஸில் பயணம் செய்பவர்கள், ஓட்டல்கள், புத்தக கண்காட்சியில் கூட பெரும்பாலும் முகக்கவசம் அணிவதில்லை.எனவே மக்கள் அலட்சியத்தை கைவிட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.