நானா சதி செய்தேன்.. ஜே. ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி.. முதல்வருடன் அவசர சந்திப்பு
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து பேசினார்.
சென்னை: "நான் எந்த சதியிலும் ஈடுபடவில்லை. ஜெயலலிதா மரணம் குறித்து 2 முறை வாக்குமூலம் அளித்துள்ளேன். இதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை" என்று தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் ஜே. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் அவர் சந்தித்துப் பேசியுள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம், சசிகலா குடும்பத்தினரை பகிரங்கமாக குற்றஞ்சாட்டி இருந்தார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்று அடித்து சொன்ன அமைச்சர், ராதாகிருஷ்ணனையும் விட்டு வைக்கவில்லை.
அப்போது அமைச்சர் பேசியபோது, "சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அப்போதிருந்தே ஜெயலலிதா மரணம் தொடர்பாக முரண்பாடாக பேசி வருகிறார். அதனால் அவரை காவலில் எடுத்து ஆணையம் விசாரிக்க வேண்டும். அதேபோல, மாஜி தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவையும் ஆறுமுக சாமி கமிஷன் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும்" என்று சொன்னார்.
எதிர்பார்க்கவில்லை
சசிகலா மீது அதிமுக தரப்பு பழிகளை போடுவதும், விமர்சனங்களை வைப்பதும் எப்போதுமே நடப்பதுதான் என்றாலும், ஆளும் அரசின் சுகாதார துறை செயலாளர் மீது குற்றஞ்சாட்டியது பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு அமைச்சரே தன் ஆளும் அரசின் கீழ் உள்ள, அதிலும் சுகாதாரத்துறை அமைச்சருக்கு அடுத்தபடியான முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரியை பெயர் சொல்லி குறை சொன்னதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
2 முறை ஆஜராகினேன்
அமைச்சரின் இப்படி ஒரு பேட்டியை ராதாகிருஷ்ணனும் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லைதான். இந்த புகார் குறித்து ராதாகிருஷ்ணன் கூறுகையில், "ஆறுமுகசாமி ஆணையம் முன்பு ஆஜராகி 2 முறை விளக்கம் அளித்து விட்டேன். நான் யாருடனும் எந்த சதியிலும் ஈடுபடவில்லை. இதற்கு மேல் இதில் பேச முடியாது. காரணம், விசாரணை நடந்து வருகிறது" என்று சொன்னார். ஆனால் விளக்கத்தை அளித்துவிட்டு அத்துடன் ராதாகிருஷ்ணன் விடவில்லை.
முதல்வருடன் சந்திப்பு
விளக்கம் அளித்த கையோடு அவசர அவசரமாக முதல்வரிடம் ஓடினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். எதற்கான இந்த சந்திப்பு என்று உடனடியாக தெரியாவிட்டாலும், சிவி சண்முகம் குறித்து ஏதேனும் புகாரோ அல்லது அவர் அளித்த குற்றச்சாட்டிற்கான விளக்கத்தையோ ராதாகிருஷ்ணன் தந்திருக்கலாம் என தெரிகிறது.
நிலைகுலைந்த செயலாளர்
அப்படி இல்லையென்றால், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குட்கா ஊழலில் சிக்கியுள்ளார். அதுகுறித்தும் ராதாகிருஷ்ணன் முதல்வரிடம் சுட்டிக் காட்டி பேசியிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. எப்படி இருந்தாலும், ஏற்கனவே ரத்தத்தை மாற்றி செலுத்தி தமிழக மக்களிடம் ராதாகிருஷ்ணன் வறுபட்டு வருகிறார். இதில் அமைச்சர் புகாரும் சேர்ந்து கொண்டதால், நிலைகுலைந்து போயுள்ளார் ராதாகிருஷ்ணன்!!