பெங்களூரில் பெண் சுகாதார ஊழியர் மீது தாக்குதல்.. உ.பி.யில் போலீசுக்கு அடி.. வரம்பு மீறும் மக்கள்
சென்னை: நாடு தழுவிய அளவில் லாக்டவுன் செயல்படுத்தப்படும் நிலையில் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் இதுபோன்ற மோசமான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் ஹெக்டேநகர் சாராயபாளையா, சாதிக் லேஅவுட் என்ற பகுதியில் ஆஷா பணியாளர், கிருஷ்ணவேணி சிலரால் தாக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். கிருஷ்ணவேணி அளித்த ஒரு பேட்டியில், வீடு வீடாக சென்று யார் யாருக்கு, சளிக்காய்ச்சல் போன்றவை இருக்கிறது என்பதை விசாரித்து அவர்களின் பெயர் மற்றும் செல்போன் எண்களை கேட்டு எழுதுவது, எனக்கு ஒதுக்கப்பட்ட பணி.
10 நாட்களாக இவ்வாறு செய்து வந்தேன். சாதிக் லேஅவுட் என்ற பகுதியில் இன்று இவ்வாறு விபரம் கேட்டு சென்றிருந்தேன். அப்போது ஒருவர், எதற்காக இவ்வாறு பெயர்களை எழுதுகிறீர்கள் என்று மிரட்டும் தொனியில் கேட்டார். நான் காரணம் கூறியபோது இங்கு யாருக்கும் எந்த அறிகுறியும் இல்லை என்று வெளியே செல்லுமாறு மிரட்டினார்.
மேலும் நாங்கள் இவ்வாறு சென்றுள்ள தகவலை மசூதி மூலமாக மைக்கில், அறிவித்தனர். இந்த அறிவிப்பை கேட்டதும் அப்பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி எங்களை மிரட்டினர். அனைவரும் எங்களை சரமாரியாக திட்ட ஆரம்பித்தனர். உங்களை யார் வர சொன்னார்கள்? உங்களுக்கு என்ன வேலை எங்கே இருக்கிறது? உடனடியாக வீட்டுக்கு கிளம்பி செல்லுங்கள் என்று திட்ட ஆரம்பித்தனர்.
#WATCH Karnataka: An Asha worker, Krishnaveni says she was attacked in Byatarayanapura, Bengaluru while collecting data on #coronavirus. Says, "The problem started when an announcement was made against us from a mosque, whoever made that announcement should be arrested".(April 1) pic.twitter.com/9jBT9q7K0L
— ANI (@ANI) April 2, 2020
என்னுடைய கைப்பையை பறித்து கொண்டனர். செல்போனை பறித்துக்கொண்டு யாருக்கும் போன் செய்வதற்கு அனுமதி அளிக்கவில்லை. கடந்த ஐந்து வருடமாக வேலை பார்த்து வருகிறேன். ஆனால், இப்படி ஒரு கஷ்டத்தை இதுவரை அனுபவித்ததில்லை. இவர்கள் ஆரோக்கியத்திற்காகதான் நாங்கள் வீடு வீடாக செல்கிறோம். ஆனால் எங்களை அடித்து விரட்டுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் கர்நாடக போலீசார் இன்று மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
மற்றொரு பக்கம், உத்தரபிரதேச மாநிலத்தில் முசாபர் நகர் பகுதியில் லாக் டவுன் விதிமுறைகளை மீறி ஒருவர் வீட்டில் சுமார் 20 பேர் கூடி ஆலோசனை நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் தெரிந்தது. இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களை கலைந்து போக எச்சரித்தனர். ஆனால், இந்த வீட்டிலிருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் சேர்ந்து காவல்துறையினரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் இன்ஸ்பெக்டர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீரட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் இந்த சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.