நெருங்கும் கிளைமேக்ஸ்! ஓபிஎஸ்? இபிஎஸ்? தேதி குறித்த உச்சநீதிமன்றம்! விடை கொடுக்குமா வெள்ளிக்கிழமை?
சென்னை : அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை வருகின்ற 30ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகி இருக்கிறது
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டனர்.
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் இதனால் கடும் அதிர்ச்சியை சந்தித்துள்ள நிலையில் கட்சியில் தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டி மாறி மாறி நீதிமன்றங்களை நாடி வருகிறார்.
அதிமுக அரசியல் ஆலோசகர் பதவி கொடுத்த ஓபிஎஸ்..பண்ருட்டி ராமச்சந்திரனை கட்சியை விட்டே நீக்கிய இபிஎஸ்
அதிகார மோதல்
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு செல்லாது என ஒரு நீதிபதி அமர்வு தீர்ப்பளித்த நிலையில் ஓபிஎஸ் தரப்பு உற்சாகம் அடைந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்ய அந்த தீர்ப்பு அவருக்கு சாதகமாக வந்ததால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் உற்சாகமடைந்தனர். இருந்தும் விடாத ஓ.பன்னீர்செல்வம் இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி
அதே நேரத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக அதிமுக எடப்பாடி பழனிசாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. பொதுக்குழு வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்ததால் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என பழனிசாமி தரப்பினர் மனு தாக்கல் செய்தனர். தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் அளிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை விசாரணை
இந்த வழக்கின் தீர்ப்பை பொருத்தே ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் குறித்து தீர்க்கமான முடிவுகள் வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதே போல அதிமுக பொதுக்குழு உறுப்பினரான வைரமுத்து என்பவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார் இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை வரும் வெள்ளிக்கிழமை அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
விடை தெரியும்
இந்த வழக்கில் தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் கேவியட் மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் விசாரணையின் போது அனல் பறக்கும் வாதங்கள் முன்வைக்கப்பட உள்ளன. அதிமுகவிலிருந்து ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ள நிலையில் அவர் வழக்கு தொடர்வதற்கு தகுதியற்றவர் என்ற வாதத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நிச்சயம் முன்வைக்கும். அந்த வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கேள்விகள் அனைத்திற்கும் வெள்ளிக்கிழமை விடை கிடைத்துவிடும் என்கின்றனர் அதிமுகவினர்.