என்னை முதல்வராக்கினது ஜெ.தான் - ஓபிஎஸ்! 2 பேரையும் முதல்வராக்கியது சசிகலா- ஒரே போடு போட்ட ஈபிஎஸ்!
சென்னை: அதிமுகவில் யார் யாரால் முதல்வராக்கப்பட்டார்கள் என்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இடையே அதிமுக செயற்குழுவில் படுகாரசாரமான விவாதம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை சுமார் 5 மணிநேரம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து படுதீவிரமான, காரசாரமான விவாதங்கள் நடந்தன.
அதிமுக கூட்டணி முதல்வர் வேட்பாளர் யார்? அக்டோபர் 7ம் தேதி வெளியாகிறது அதிரடி அறிவிப்பு
அக்-7ல் முதல்வர் வேட்பாளர்
இதனையடுத்து அக்டோபர் 7-ந் தேதியன்று முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் இருவருமே கூட்டாக முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி இதனை அறிவித்தார்.
ஓபிஎஸ் ஆவேசம்
இதனிடையே அதிமுகவின் செயற்குழுவில், யார் யாரால் முதல்வராக்கப்பட்டனர் என்பது குறித்து ஓபிஎஸ்- ஈபிஎஸ் இடையே கடுமையான விவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில், என்னை முதல்வராக்கியது ஜெயலலிதாதான். ஆகையால் ஜெயலலிதாவின் தேர்வுப்படியே நானே முதல்வர் வேட்பாளர் என ஓபிஎஸ் ஆவேசம் காட்டியிருக்கிறார்.
முதல்வர் வேட்பாளர் நானே
அத்துடன் தற்போதைய அதிமுக அரசு இடைஞ்சலாக இருந்துவிடக் கூடாது என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக மட்டும்தான் துணை முதல்வர் பதவியை ஏற்கவும் ஒப்புக் கொண்டேன்; அதற்காவே நான் துணை முதல்வராக இருக்க வேண்டும் என்பதும் இல்லை. முறைப்படி பார்த்தால் என்னையே அதிமுகவின் முதல்வர் வேட்பாளராகவே அறிவிக்க வேண்டும் என வாதாடியிருக்கிறார்.
ஈபிஎஸ் பதிலடி
அப்போது குறுக்கிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உண்மையில் உங்களையும் (ஓபிஎஸ்ஸையும்) என்னையும் (ஈபிஎஸ்) முதல்வராக்கியது சசிகலாதான். இதை நீங்க மறந்துவிடவேண்டும். இப்போது என்னை சசிகலாதான் முதல்வராகவும் தேர்வு செய்தார். அதனால்தான் முதல்வராக இருக்கிறேன். அதை நான் மறுக்கவில்லை என சுட்டிக்காட்டினாராம் ஈபிஎஸ்.
என்னுடைய ஆட்சி நல்லாட்சிதானே?
மேலும், என்னுடைய தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது; மக்களுக்கான நலதிட்டங்கள் செய்து கொடுக்கப்படுகின்றன. மக்களிடையேயும் என்னுடைய ஆட்சிக்கு ஆதரவு இருக்கிறது. அதனால்தான் நானே முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறியிருக்கிறார். இதற்குப் பின்னர்தான் இருவரும் அக்டோபர் 7-ந் தேதியன்று முதல்வர் வேட்பாளரை அறிவிப்பது என செயற்குழு முடிவெடுத்ததாம்.