வெப்பநிலை இயல்பைவிட 4 - 5 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 4 - 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட மேற்குத் திசை காற்று வலுவாக வீசுவதால் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி மதுரை ஆகிய 11 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு வெப்பம் அதிகரித்துக் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 4 அல்லது 5 நாட்களில் வடக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் வெப்பம் அதிகரிக்கும். அனல் காற்றும் வீச வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் அடுத்த இரண்டு தினங்களுக்கு காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் முதல் நாளே சூப்பர்.. தமிழின் ஆதிக்கத்தை அழுத்தமாக நிலைநாட்டிய தமிழக எம்பிக்கள்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக நீலகிரி மாவட்டம் கூடலூர் பசார், தேவாலா ஆகிய இடங்களில் தலா 2 செண்டி மீட்டரும், நடுவட்டத்தில் ஒரு செண்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலையாக 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் தொடர்ந்து நிலவும் வறண்ட வானிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிகபட்சமாக வேலூர், திருத்தணி, மதுரை ஆகிய இடங்களில் நேற்று 104 டிகிரி வெயில் கொளுத்தியது.
இந்த நிலையில், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்துள்ளது. தென் மேற்கு பருவமழை எதிரொலியாக, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட கேரளா எல்லையோரப் பகுதிகளில் அவ்வப்போது, காற்றுடன் சாரல் மழை பெய்கிறது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து குறைந்தது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.