காவிரியில் பெருக்கெடுக்கும் வெள்ளம்.. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2.40 லட்சம் கன அடியாக உயர்கிறது!
காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதை அடுத்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று மாலையில் இருந்து வேகமாக அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதை அடுத்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று மாலையில் இருந்து வேகமாக அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழை காரணமாக, தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடுமையான மழை பெய்து வருகிறது. அதேபோல் கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவும் காவிரியில் நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது.
கர்நாடகாவில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடுமையாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
என்ன அணை
இந்த நிலையில் தற்போது கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறப்பு 3 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. கபினி மற்றும் அதன் தடுப்பு அணையில் இருந்து வினாடிக்கு 1.25 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 1.75 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
மேட்டூர் அணை
இது போக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 1.15 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. காலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.05 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.15 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்துள்ளது.
நீர் வரத்து
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று இரவு 1.50 லட்சம் கன அடியை எட்டும் என்றும் என்று நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாளை இரவுக்குள் 2.40 லட்சம் கன அடியையாக மாறும் என்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே அணையிலிருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
காவிரி எப்படி
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான உத்தர கர்நாடகா, சிவமோகா, பெலகாவி, மடிகேரி, மைசூர், மங்களூர், குடகு உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு நாளையும் மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் காவிரியில் நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள்.