ஆஹா.. மொத்த தமிழ்நாட்டுக்கும் பெரிய "மங்கி கேப்" தேவை போலயே.. 2 நாள் கடும் குளிரடிக்க போகுதாம்!
12, 13 தேதிகளில் அதிக குளிர் வீசும் என வானிலை ஆர்வலர் செல்வகுமார் கூறியுள்ளார்.
சென்னை: வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்தில் குளிர் பின்னியெடுக்க போவதாக வானிலை ஆர்வலர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக தமிழகத்தில் முழுவதும் குளிர் வாட்டி வருகிறது. சென்னை, மதுரை போன்ற மாவட்டங்களிலேயே குளிரடிக்கிறது என்றால், ஊட்டி, கொடைக்கானலை பற்றி கேட்கவே வேண்டாம். குளிருடன் பனிபொழிவும் சேர்ந்து மாவட்ட மக்களை கதி கலங்க வைத்து வருகிறது.
இந்த சமயத்தில் வரும் 12, 13 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதுமே குளிரடிக்க போவதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கூறியுள்ளார். இது சம்பந்தமாக அவர் சொல்லும்போது, "நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் அருகே காற்றழுத்த சுழற்சி ஒன்று நிலவி வருகிறது.
இது, வரும் 12-ம் தேதி இலங்கைக்கு தெற்கே நகர்ந்து வர போகிறது. இதனால் தமிழகத்துக்கு மழை எதுவும் வர வாய்ப்பு இல்லை. ஆனாலும் இதன் காரணமாக மேகக்கூட்டங்கள் அதிகரித்து தமிழகம் முழுவதும் குளிர்ந்த காற்று வர வாய்ப்புகள் நிறையவே உள்ளன.
குறிப்பாக வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதாவது 12 மற்றும் 13 தேதிகளில் குளிரின் தாக்கம் நம் மாநிலத்தில் அதிகமாகவே இருக்கும். அதிலும் அந்த நாட்களின் இரவு நேரத்தில் கூடுதலாகவே குளிர் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.