துரைமுருகனுக்கு பொது செயலாளர் பதவி தந்தாச்சு.. அப்ப பொருளாளர்?.. அடேங்கப்பா.. லிஸ்ட் பெருசா இருக்கே!
திமுகவின் அடுத்த பொருளாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: திமுக பொருளாளர் பதவியிலிருந்து துரைமுருகன் விலகி உள்ள நிலையில் அடுத்த பொருளாளர் யார் என்ற கேள்வியும் அது குறித்த எதிர்பார்ப்பும் ஒட்டுமொத்த தமிழக அரசியலில் எழுந்துள்ளது!
பேரறிஞர் அண்ணா அமர்ந்த தலைவர் பதவி திமுகவில் எத்தனை முக்கியமோ அதே போலத்தான் பொருளாளர் பதவிக்கென்று ஒரு தனி முக்கியத்துவம் உண்டு. இதற்கு காரணம், திமுக முதல் முறையாக பெரும் பிளவை சந்திக்க காரணமே இந்த பொருளாளர் பதவிதான்! அதனால்தான் திமுகவில் தலைவர் பதவியைவிட இந்த பொருளாளர் பதவிதான் அதிமுக்கியத்துவமாக பார்க்கப்படும்.
அந்த வகையில் தற்போது பொருளாளர் பதவியில் யார் நியமிக்கப்பட உள்ளார்? அந்த நியமனம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? கட்சிக்கு எந்த வகையான பலத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும்? நிலவி வரும் அரசியல் சூழலில் கடினமிக்க இந்த பொருளாளர் பதவியை அலங்கரிக்க போவது யார்? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு 5 மூத்த தலைவர்களின் பெயர்களும் அடிபடுகின்றன.. அவர்கள் டிஆர் பாலு, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கனிமொழி, எவ.வேலு ஆகியோர்தான்!
எவ வேலு
எவ வேலுவை பொறுத்தவரை, ஸ்டாலின் திமுக தலைவரானபோதே, காலியாக இருந்த பொருளாளர் பதவியை அடைய மிகவும் முயற்சி செய்தார்.. ஆனாலும் முடியவில்லை.. கட்சியின் தீவிர விசுவாசி இவர்.. வேலுவை பொருளாளர் பதவியில் அமர்த்தி அழகு பார்க்க வேண்டும் என கிட்டதட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களே மூத்த நிர்வாகிகளிடம் முன் வைத்து வருகின்றனர்.. இதற்கு காரணம், "தலைவரின் நிதி விவகாரங்களை வேலுதான் கவனிக்கிறார்... தலைவருக்கு நம்பிக்கையானவர்... தேர்தல் நேரத்தில் திடீரென ஏதாவது செலவு ஏற்பட்டால்கூட உடனடியாக புரட்டி தந்து சமாளித்து விடுகிறார்.. அதனால் அண்ணன் வேலுதான் அடுத்த பொருளாளர் என்கிறார்கள் இவர்கள்!
ஒரே ஒரு சிக்கல்
இந்த கருத்தையும் மறுப்பதற்கில்லை.. ஸ்டாலினின் விசுவாசத்துக்குரியவரும், அப்போதிருந்தே முயற்சி செய்து வருபவருமான வேலுவுக்கு இந்த பதவி கிடைக்கலாம் என்கிறார்கள்... எனினும் இதில் ஒரே ஒரு சிக்கல் இருக்கிறது.. அதிமுகவில் இருந்து வந்தவருக்கு பொருளாளர் பதவியா என்றும் கேள்வி எழுப்ப வாய்ப்புகள் இதில் நிறையவே உள்ளன. அதை விட முக்கியமாக வேலு முழுமையாக நம்பகத்தன்மை வாய்ந்தவர் கிடையாது என்ற கருத்தும் உண்டு.
டிஆர் பாலு
அடுத்ததாக டி.ஆர்.பாலு... தற்போது இவர்தான் ஏகப்பட்ட வருத்தத்தில் உள்ளார்.. கேஎன் நேருவுக்கு பதவி தந்ததில் இருந்தே கடும் அப்செட்... தன் சீனியாரிட்டி குறித்து குறிப்பிட்டு கேள்வியும் எழுப்பியவர்.. ஸ்டாலினிடம் வருத்தப்பட்டு கொண்டு, கொஞ்ச நாட்கள் அறிவாலயம் பக்கம்கூட வராமல் இருந்தார்... ஆனால் திறமைசாலி.. தமிழகத்திற்கும் டெல்லிக்கும் இடையே பாலமாக இருந்து திமுக வளர்ச்சிக்கு உதவி வருபவர்... மறைந்த முரசொலி மாறனுக்கு பிறகு டெல்லியில் அதிக செல்வாக்கோடும், கட்சி ரீதியான நடவடிக்கைகள் மூலமாகவும் செயல்பட்டவர் என்ற பெயரை பெற்றவர் டி.ஆர்.பாலுதான்! தற்போது அதிருப்தியில் இவர் உள்ளதால் அவரது வருத்தத்தை போக்க பொருளாளராக டிஆர் பாலுவை தேர்வு செய்யலாமா என்றும் கட்சி தலைமை யோசனையில் உள்ளதாம்!
ஐ பெரியசாமி
இதற்கு அடுத்ததாக லிஸ்ட்டில் உள்ளவர் ஐ.பெரியசாமி.. தென் மாவட்டத்தை தூக்கி நிறுத்தக்கூடியவர்.. முக அழகிரிக்கு இணையான செல்வாக்கையும் பெற்றவர்.. அழகிரி இருந்தபோது, தென்மாவட்டங்களை பற்றி கருணாநிதி கவலையே படமாட்டார்.. மொத்தத்தையும் அழகிரியின் பொறுப்பில் விட்டுவிடுவார்.. இப்போது அப்படி ஒரு ஆளுமை தென் மாவட்டங்களில் இல்லை.. எப்படியோ இன்னும் கொஞ்ச நாளில் தேர்தல் வரப்போகிறது.. 2 முறை ஆட்சியை தவறவிட்ட திமுக இந்த முறை எப்படியேனும் அரியனை ஏற்க பார்க்கிறது. ஐ.பெரியசாமி அந்த வகையில் புதிய பொதுச்செயலாளராக ஐ.பெரியசாமியை நியமிக்கலாம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளதாம். அது மட்டுமல்ல.. அன்று கலைஞர் இருந்தபோது, தென்மாவட்டம் சம்பந்தமாக அழகிரியிடம் ஒட்டுமொத்த பொறுப்பு இருந்தாலும், சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தல்கள் என்றால் ஐ.பெரியசாமி தானாக வந்து தென்மாவட்டத்தை வழிநடத்தி சென்றார்.. அந்த வகையில்தான் இவரது பெயரும் அடிபடுகிறது... ஸ்டாலின் மனசிலும் இதுதான் உள்ளது என்கிறார்கள்.
ஆ.ராசா
ஆ.ராசாவை பொறுத்தவரை கருணாநிதிதான் முதல் முறையாக எம்பி ஆக்கினார்... பின் மாவட்ட செயலாளர் பதவி தந்தார்... இதையடுத்து, தலித் கோட்டாவில் மாநில துணை பொதுசெயலாளர் பதவியை ராசாவுக்கு தர, கருணாநிதியே விரும்பி ராசாவிடம் கேட்டதாகவும், அதற்கு அப்போது ராசா மறுத்துவிட்டதாகவும்கூட செய்திகள் வந்தன.. அந்த வகையில் தற்போது பொருளாளர் பதவியை இவருக்கு தரலாமா என்ற யோசனையும் உள்ளதாம்.. இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. பாஜக மாநில தலைமைக்கு எல்.முருகனை நியமித்துள்ளது டெல்லி மேலிடம்.. இப்படி பட்டியலினத்தவரை தலைமை பொறுப்பில் அமர்த்திவிட்டு, "எங்கே உங்களில் யாராவது ஒரு தலித் தலைவரை காட்டுங்கள் பார்க்கலாம்? பட்டியலின தலைவரின் கீழ்உங்களால் செயல்பட முடியுமா" என்று நேரடி கேள்வி கணைகளை எழுப்ப தொடங்கி உள்ளது.. இதை வைத்து திமுகவின் தலித் வாக்குகளை பிரிக்க நினைக்கும் பாஜகவின் திட்டங்களை தவிடுபொடியாக்கவும் ஆ.ராசாவுக்கு இப்பொறுப்பை தரலாமா என்பதுதான் திமுகவின் தீவிர யோசனை!
கனிமொழி
இந்த லிஸ்ட்டில் அடுத்துள்ளவர் கனிமொழி.. கருணாநிதி மறைவுக்கு பிறகு நிறைய பொறுப்புகளுக்கு ஆசைப்பட்டவர்.. ஆனால் வெளிப்படையாக தன் எண்ணத்தை காட்டிக் கொள்ளவில்லை... நாடாளுமன்ற திமுக குழு தலைவர் பதவி யாருக்கு? என்பதில் டிஆர் பாலுவுக்கும் கனிமொழிக்கும் இடையேதான் அதிகமாக ரேஸ் இருந்தது.. கடைசியில் திமுக மக்களவை குழு துணை தலைவராகவே கனிமொழி தேர்வு செய்யப்பட்டார்... தற்போது பொருளாளர் பதவியை கனிமொழி விரும்புவதாக கூறப்படுகிறது.. அதேசமயம், இந்த பதவிக்கு கனிமொழியை நியமனம் செய்ய திமுக தலையே கருதுவதாகவும் தெரிகிறது.. காரணம், மகளிருக்கு முக்கியத்துவம் தரும் வகையிலும், கனிமொழிக்கு உரிய அங்கீகாரத்தை தரும் வகையிலும் இந்த பொறுப்பை தரவும் யோசனை நடந்து வருகிறதாம்.
ஊழல் குற்றச்சாட்டு
ஆக மொத்தம் இந்த 5 பேருக்கும் இடையேதான் பொருளாளர் பதவிக்கு பலத்த போட்டி எழுந்து வருகிறது.. இவர்களை தவிர பொன்முடியும் லிஸ்ட்டில் உள்ளார்.. ஆனால் இடைத்தேர்தல் தோல்விக்கு பிறகு இவருக்கான முக்கியத்துவம் அதே அளவுக்கு கட்சியில் இருக்கிறதா என்பது தெரியவில்லை.. ஆனால் இவர்கள் எல்லாருமே கட்சியின் தூண்கள்.. திறமைசாலிகள்.. ஒருத்தருக்கொருத்தர் சளைத்தவர்கள் இல்லை.. திமுகவின் ஆழமான பிடிப்புகளே இவர்கள்தான்.. அதனால் யாருக்கு கிடைத்தாலும் பொருளாளர் பதவியை சிறப்பாகவே வழிநடத்துவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.. பொதுவாக பொருளாளர் பதவியில் அமர்த்தப்படுபவர்கள் யாராக இருந்தாலும் எந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாதவர்களாக இருத்தல் வேண்டும்.. அந்த வகையில் யார் திமுகவின் அந்த பொருளாளர் என்ற எதிர்ப்பார்ப்பு எகிறி கொண்டே இருக்கிறது!