புரேவி புயல் நாளை வலுடைகிறது... குமரியில் நிலை கொள்ளும் - டிசம்பர் 2, 3,4ல் அதீத கனமழை
வங்கக்கடலில் நாளை புயல் உருவாகும் என்றும் இதன் காரணமாக டிசம்பர் 2 முதல் 4 வரை அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: வங்கக்கடலில் நாளை புரேவி புயல் உருவாகிறது. இலங்கையை கடந்து குமரிக்கடல் பகுதியில் நிலை கொள்ளும் இந்த புயலால் தென் தமிழகத்திலும் வட மாவட்டங்களில் திருவள்ளூர் , காஞ்சிபுரத்தில் மிக அதிக கனமழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் தமிழகம், தெற்கு கேரளா பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானி்லை மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 2,3,4ஆம் தேதிகளில் தமிழகத்தில் அதீத கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை அக்டோபர் இறுதியில் தொடங்கியது. பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. கடந்த வாரம் நிவர் புயல் கரையை கடந்தது. புயலினால் தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏரிகள், குளங்கள்,நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
மத்திய தெற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின்னர் புயலாக மாறும் என இந்தியவானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 2 முதல் கனமழை
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதால் டிசம்பர் 2,3,4ஆம் தேதிகளில் மிழகத்தில் அதீத கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டிசம்பர் 2ஆம் தேதி தென் தமிழகத்தில் அதி கனமழையும், வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் வலுவடையயும்
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், நாளை புயலாக வலுவடைகிறது என்று கூறினார். இந்த புயல் வரும் 2ஆம் தேதி இலங்கையில் கரையை கடக்கும் பின்னர் குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகர்ந்து மையம் கொள்ளும் என்றும் புவியரசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதீத கனமழை
இந்த புயல் காரணமாக டிசம்பர் 3ஆம் தேதி தென் தமிழகத்தில் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரியில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மிக அதிக கனமழை பெய்யும். சென்னையில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் புவியரசன் கூறியுள்ளார்.