சென்னை தாம்பரம் அருகே முடிச்சூர் வரதராஜபுரம் அடையாறு ஆற்றில் கனமழையால் வெள்ளம்
சென்னை: சென்னை தாம்பரம் அருகே முடிச்சூர் வரதராஜபுரம் அடையாறு ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்துள்ளார்கள்.
நிவர் புயலால் தமிழகம், புதுவையில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. அது போல் கடலூர், சிதம்பரம், ஈசிஆர், முட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
பெரும்பாலான இடங்களில் உள்ள ஏரிகள் நிரம்பியதால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடல்களும் சீற்றத்துடனேயே காணப்படுகின்றன. இந்த நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று முதல் அடை மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது.
இதனால் குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. விஷ ஜந்துக்களும் தண்ணீருடன் அடித்து வருவதால் மக்கள் அச்சத்துடன் இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தாம்பரம் அருகே முடிச்சூர் வரதராஜபுரம் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்த முடிச்சூர் பகுதி கடந்த 2015 வெள்ளத்தின் போது கடுமையாக பாதிக்கப்பட்டது. அது போல் ஒவ்வொரு முறையும் மழையின் போதும் பாதிக்கப்படுகிறது.
இந்த பகுதிகளில் வடிகால் வசதி இல்லை என்றும் அப்படியே இருந்தாலும் அவை தூர்வாரப்படவில்லை என்றும் அதனால் தண்ணீர் தேங்கிக் கொண்டிருக்கிறது என்றும் அதனாலேயே ஒரு சிறு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி எங்கள் பொருட்களை சேதப்படுத்துகிறது என்றும் வேதனை தெரிவித்தார்கள்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் மகாலட்சுமி நகர், விஷ்ணு பிரியா நகர், பெருமாட்டுநல்லூர், உள்ளிட்ட பகுதியில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலை முழுவதும் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள், சிரமப்பட்டனர். அனைத்து சாலைகளிலும் தண்ணீர் தேங்கியதால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தினரினர். மேலும் கூடுவாஞ்சேரி எரி, காயிராம்பேடு ஏரி, காட்டாங்கொளத்தூர் ஏரி, உள்ளிட்ட ஐந்து ஏரிகள் முழு கொள்ளளவு ஏட்டியதால் ஏரி கரைகள் உடையும் அபாயம் உள்ளதாக குடியிருப்பு வாசிகள் அச்சுகின்றனர்.