ஆஹா.. அருமை.. 8 மாவட்டங்களில் கனமழை வெளுக்க போகுது.. சென்னைக்கு சிறப்பு கவனிப்பு இருக்காம்
சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்யும் என செனனை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "வளி மண்டத்தின் கீழ் அடுக்கில் வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை உள் மாவட்டங்கள் வழியாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.
இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 தினங்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
மேலும் கனமழையை பொறுத்த வரை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள நீலகிரி, தேனி, கோவை திண்டுக்கல் உள்பட 8 மாவட்டங்களிலும் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் மாலை மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தென்மேற்கு பருவ மழை வழக்கத்தைவிட 31 சதவீதம் குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் 10 செ.மீ மழை பெய்துள்ளது" என்றார்.