நிவர் புயல் வரும் முன்பே சென்னையில் வந்தது ஷவர்... சொட்டச் சொட்ட நனைந்த தலைநகரம்
நிவர் புயல் கரையை கடக்கும் முன்னதாகவே சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது. சொட்ட சொட்ட நனைந்து சென்னை மாநகரம் குளிரத்தொடங்கியுள்ளது.
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் மணிக்கு 11 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. நிவர் வரும் முன்பே சென்னையில் கனமழை கொட்டத் தொடங்கியதால் குளிர குளிர நனைந்தது சென்னை மாநகரம். புறநகரின் பல பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்தது.
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது செவ்வாய்கிழமை புயலாக மாறி புதன்கிழமை பிற்பகல் காரைக்கால்-மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்கக் கூடும் என வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நிவர் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு - 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம் - முதல்வர்
வானிலை அறிவிப்பு பொய்யாகவில்லை. சென்னை மாநகரத்தை மழை சொட்ட சொட்ட நனைத்து வருகிறது. குளிர் காற்றும் சேர்ந்து கொண்டது. நிவர் புயல் காரணமாக சென்னையில், சைதாபேட்டை, கிண்டி, கோடம்பாக்கம், தாம்பரம், கிண்டி, நுங்கம்பாக்கம் பகுதிகளில் கனமழை பெய்தது.
பூவிருந்தவல்லி, அம்பத்துார், ஆவடி, மீஞ்சூர், திருவொற்றியூர், துரைப்பாக்கம், சேப்பாக்கம், திருவான்மியூர், செம்பரம்பாக்கம் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.
சென்னையின் புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நங்கநல்லூர், கீழ்கட்டளை, தாம்பரம், கூடுவாச்சேரி, வண்டலுார், பம்மல், அனகாபுத்துார் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை கொட்டியது.
நெருங்கி வரும் நிவர் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 420 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. நிவர் புயல், புதுச்சேரியிலிருந்து 360 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருக்கிறது. சென்னையை நோக்கி நிவர் புயல் நெருங்கி வருகிறது. நிவர் நெருங்கும் முன்பே ஷவர் வந்து சென்னையை நனைத்து விட்டது. இன்னும் ஒரு வாரத்திற்கு சென்னையும் புறநகரும் குளிர குளிர நனையப் போகிறது.