கனமழையால் நிரம்பிய நந்திவரம் ஏரி... கூடுவாஞ்சேரியில் மிதக்கும் வீடுகள் கழுத்தளவு தண்ணீர் சூழ்ந்தது
கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் கழுத்தளவிற்கு குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
செங்கல்பட்டு: பல மணிநேரம் விடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. நந்திரவரம் ஏரி நிரம்பி வழிவதால் கூடுவாஞ்சேரியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கழுத்தளவிற்கு சூழ்ந்துள்ள தண்ணீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
Recommended Video
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை கழுத்தளவிற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் நந்திவரம் கூடுவாஞ்சேரி ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. ஜிஎஸ்டி சாலையிலும் வெள்ளம் காட்டாறு போல பாய்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவான 23.3 அடியில் தற்போது 24.6 அடியாக உயர்ந்து உள்ளது ஏரிக்கு உபரிநீர் நீர்வரத்து என்பது விநாடிக்கு சுமார் 10,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
நேற்று இரவு முதல் கொட்டி தீர்த்த கன மழையால் ஏரிக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது மழை அதிகமாக பெய்தால் இந்த ஏரிக்கு மேலே உள்ள தண்டரை பேட்டை புச்சேரி தண்டலம் மோச்சேரி ஆகிய கிராம பகுதிகளில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி உள்ளது இவை குடியிருப்பு பகுதிக்குள் புகும் அபாய நிலை உருவாகி உள்ளது.
மேலும் மதுராந்தகத்தில் இருந்து எண்டத்தூர் சாலைக்கு மேல் வெள்ளநீர் செல்வதால் சாலைகள் அரிப்புகள் ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முடங்கி உள்ளது. வெள்ள நீரால் நெல் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது
மதுராந்தகம் ஏரியின் அவசரகால சட்டத்தை உடனடியாக திறக்க வேண்டும் அப்படி திறக்கவில்லை என்றால் பத்து கிராமத்துக்குள் வெள்ள நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவும் சாலைகள் மட்டுமில்லாமல் நெல் பயிர்களும் அழுகும் நிலை ஏற்படுமென விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கொட்டித்தீர்த்த கனமழையால் வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி - 3000 கன அடி நீர் திறப்பு
அவசர காலத்தை மனதில் கொண்டு பொதுப் பணித்துறையினர் மதுராந்தகம் ஏரியின் அவசரகால ஷட்டரை திறக்க வேண்டும் அப்படி திறந்தால் மட்டுமே இப்பகுதியில் தேங்கி இருக்கும் மழை வெள்ள நீர் வடியும் என தெரிவித்தனர்.
தாம்பரம் ரயில் நிலைய சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மூடப்பட்டிருக்கிறது. 5 அடி வரை தண்ணீர் தேங்கி இருப்பதால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவல் துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். தாம்பரம் கேம்ப் ரோடு, மேடவாக்கம் செல்ல மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இன்னும் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கும் நிலையில் ரயில்வே நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.