EXCLUSIVE: இருக்கு.. கண்டிப்பா இருக்கு.. ஆனா பயப்படாதீங்க.. சொல்கிறார் "வானிலை" செல்வக்குமார்
டிசம்பர் மாசம் கஜாவை போல புயல் இருக்காது என செல்வகுமார் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: "இருக்கு.. கண்டிப்பா இருக்கு.. ஆனா யாரும் பயப்படாதீங்க.. கஜாவை போல இன்னொரு புயல் இந்த வருஷம் முடியும் வரை கிடையாது. ஆனால் ஒட்டுமொத்த தமிழகத்திலும் டிசம்பர் முடியறதுக்குள்ள மழை அடிச்சு ஊத்த போகுது" என்று சொல்கிறார் வானிலை ஆராய்ச்சி ஆர்வலர் செல்வகுமார்.
கஜா புயல் வேதாரண்யம் அருகே கரையை கடக்கும் என்று புயலுக்கு 15 நாட்களுக்கு முன்பே துல்லியமாக கணித்து சொன்னார் அரசுப் பள்ளி ஆசிரியர் செல்வகுமார். பிறகு 7 புயல்கள் நமக்கு அடுத்தடுத்து இருப்பதாகவும் நம்மிடையே பிரத்யேகமாக தெரிவித்திருந்தார்.
டிசம்பர் மாதம் என்றாலே இயற்கை சீற்றம் குறித்து நமக்கு ஒரு பக்கம் அடிவயிற்றில் அள்ளு கிளம்பும். இதில் புயலும் வரப்போகிறது என்று சொல்லி விட்டதால், அதுகுறித்த விவரங்களை செல்வகுமார் அவர்களிடம் மீண்டும் ஒன் இந்தியா தமிழ் சார்பாக அணுகி கேட்டோம். அப்போது அவர் அளித்த பதில்கள்தான் இவை:
கேள்வி: இப்போதைக்கு தமிழ்நாட்டில நிலைமை எப்படி சார் இருக்கு?
மாலத்தீவு இலங்கைக்கு தெற்கு பகுதி அதாவது தென்மேற்கு வங்ககடல் மற்றும் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அது நாளை அதாவது 29, 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் மாலத்தீவு அருகே தீவிரமாக இருக்கும். இதனால் வட கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டியிருக்க கூடிய உள் மாவட்டங்கள், மற்றும் தென்மாவட்டங்கள் வழியாக ஈர்த்து கனமழை பெய்யக்கூடும்.
கேள்வி: இதனால் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது?
முக்கியமாக 29, 30 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம் மாவட்ட செய்யூர் பகுதி, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் பெரம்பலூர், தேனி, ராமநாதபுரம், சிவங்கை, தூத்துக்குடி, மதுரை, கன்னியாகுமரி, இந்த மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும். பிற மாவட்டங்களிலும் மழை இருக்கும். மழையோடு மட்டும் இது முடியாது. இதற்கு பிறகு தெற்கு அந்தமான் கடல் பகுதியில் அமைந்திருக்க கூடிய காற்றழுத்த தாழ்வு நிலையானது மேற்கு நோக்கி வரப்போகுது. அதனால 4-ம் தேதியிலிருந்து மழை அடிச்சு ஊத்த போகுது. இந்த தாழ்வு நிலை இலங்கைக்கு தென்கிழக்கு பகுதியில் அமைந்து கொண்டு ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்குமே மழை வரப்போகுது. அதாவது டிசம்பர் 4,5,6 ஆகிய தேதிகளில் 32 மாவட்டங்களுக்கும், ஏன், புதுச்சேரி, காரைக்காலுக்கும் சேர்த்து நல்ல மழை அடித்து ஊத்த போகிறது.
கேள்வி: அப்படியென்றால் டிசம்பர் முதல் வாரத்தில் புயலுக்கு வாய்ப்பிருக்கிறதா?
இருக்கு.. வாய்ப்பு இருக்கிறது. 4,5,6 தேதிகளில் மழை கொட்டினாலும் இலங்கையின் கிழக்கு பகுதியில் இந்த தாழ்வு நிலை நீடித்து கொண்டு, ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற போகிறது. இது புயலாக கூட மாற வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் அது எத்தனை சதவீதம் புயலாக மாற போகிறது என்பது தெரியவில்லை. இது சம்பந்தமாக ஆய்வு தொடர்ந்து நடைபெறுகிறது. ஆனால் 7-ம் தேதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கண்டிப்பாக மாறும். அது வடதமிழக கரையை நோக்கியோ அல்லது, தெற்கு ஆந்திர கரையை நோக்கியோதான் நகர்ந்துவிடும். இருந்தாலும் ஒன்னும் பயப்பட தேவையில்லை. முக்கியமாக டெல்டாவாசிகள் அச்சப்பட வேண்டாம்.
கேள்வி: இந்த வருட டிசம்பர் எப்படி இருக்கும்?
டிசம்பர் 12-லிருந்து 19 வரையுள்ள தேதிகளிலும், பிறகு 24-லிருந்து 26 வரை தேதிகளிலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே மாறி கடைசியில்புயலாகவே வரபோகிறது. டிசம்பர் மாசம் கடைசி வாரம் இந்த புயல் வரும். குறிப்பாக கிறிஸ்துமஸ் ஆரம்பிச்சவுடனேயே இதுவும் ஆரம்பித்து விடும். அப்போதிலிருந்து பொங்கல் வரைக்கும் இந்த மழை இருக்கும். ஆனால் கஜா அளவுக்கு ஒரு தீவிரம் இந்த வருஷம் முடியும் வரை இருக்காது. நல்ல மழை இருக்கும், பலமாக தமிழ்நாடு முழுசும் பெய்யும். அதனால யாருமே பயப்பட வேண்டாம்.
கேள்வி: மீனவர்களுக்கு என்ன சொல்ல வர்றீங்க?
லட்சத்தீவு மாலத்தீவுக்கு இடைபட்ட பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைகிறது. அதனால் மன்னார்வளைகுடா பகுதியில் காற்றின் வேகம் பலமாக இருக்கும். இன்றோ, நாளையோ மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை கண்டிப்பாக அவர்களுக்கு விரைவில் வரும். அதற்கு முன்பே மீனவர்கள் எச்சரிக்கையாக கொள்ள வேண்டும். டிசம்பர் 1ந்தேதி மன்னார்வளைகுடா பகுதிக்கு காற்று இருக்கும் செல்ல வேண்டாம். அதேபோல டிசம்பர் 6-க்கு மேல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக போகிறது. இலங்கையின் கிழக்கு பகுதி ஒட்டிய பகுதி மற்றும் தமிழக கடலின் பகுதிக்கு மீன்பிடிக்க செல்லவே கூடாது என்றும் அறிவிப்பு நிச்சயம் வெளியிடுவார்கள். எனவே மீனவர்கள் அதற்கு முன்பே இதற்கு தயாராகி கொள்வது நல்லது.