மொத்தம் 13 மாவட்டங்கள்.. அடுத்தடுத்த 3 நாட்கள்.. பொளந்து கட்டப் போகும் கனமழை.. செம நியூஸ்!
11 மாவட்டங்களில் கனத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேற்கு மத்திய வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது... இதன் காரணமாக, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்திலும் வளிமண்டல சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஒரு முன்னறிவிப்பு தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 11 மாவட்டங்களில் மழைக்கு நல்ல வாய்ப்பு உள்ளதாகவும் நல்ல செய்தி தெரிவித்துள்ளது
கனமழை
வானிலை ஆய்வு மைய அறிக்கையில், "வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
3 தினங்கள்
அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு அதாவது 26, 27,28 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும்.
செல்சியஸ்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசையும் ஒட்டி பதிவாகக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசையும் ஒட்டி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூறாவளி
இதில், அக்டோபர் 24,25 ஆகிய தேதிகளில் மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடக கடலோர பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 3 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் மழை என்ற செய்தியால் அந்தந்த மாவட்ட மக்களும், விவசாயிகளும் மனம் குளிர்ந்து போய் உள்ளனர்.