தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை..யாருக்கெல்லாம் குடை அவசியம்?
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை பல மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதிகளில் 8 செமீ மழை பதிவாகியுள்ளது. அவலாஞ்சி, வால்பாறையில் தலா 6 செமீ மழையும்,வால்பாறை தாலுகா அலுவலகம், வால்பாறை, மேல் பவானி,சோலையாறு சின்கோனா பகுதிகளில் தலா 5 செமீ மழையும் பதிவாகியுள்ளது. பந்தலூர் தாலுகா அலுவலகம் 4 செமீ மழை பதிவாகியுள்ளது.
ஒரு ட்ரிப் போயிட்டு வந்தா அம்பானிதான்! யுரேனஸ், நெப்டியூனில் பெய்யும்

கனமழை பெய்ய வாய்ப்பு
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இடி மின்னலுடன் கனமழை
நாளையும், நாளை மறுநாளும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 8 மற்றும் 9ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் மேக மூட்டம்
சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்றும் நாளையும் குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இன்றைய தினம் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

சூறாவளிக்காற்று
இன்று முதல் 9ஆம் தேதி வரை இலட்சத்தீவு பகுதி, கர்நாடகா - கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.