இடி மின்னலுடன் 10 மாவட்டங்களில் கனமழை - சென்னையில் சட்டென்று மாறிய வானிலை
தமிழக தென் மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் இன்று 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. சென்னையில் பல பகுதிகளில் வெயிலடித்த நிலையில் திடீரென வானிலை மாறி மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் அபரிமிதமாக மழை கொட்டித்தீர்த்தது. ஒருமாத காலமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. வீட்டிற்குள் இருந்த தண்ணீர் வடிந்தாலும் வீட்டை விட்டு இறங்கினாலே முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து போய்தான் எந்தப்பொருளையும் வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர்.
மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் விடாது பெய்து வரும் மழையால் கண்மாய்கள், குளங்கள் நிரம்பி ஊருக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இந்த நிலையில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கான மழை பற்றிய தகவல்களை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அநியாயமாக பறிபோன உயிர்.. தமிழகத்தில் மின்கம்பங்களை தர ஆய்வு செய்யணும்.. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
10 மாவட்டங்களில் கனமழை
தென் தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று திருநெல்வேலி,தென்காசி, தேனி,மதுரை, விருதுநகர்,திருச்சி,கரூர், திருப்பூர்,நாமக்கல்,திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
பல பகுதிகளில் மழை
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. வானிலை மையம் அறிவித்தது போல சென்னையில் இன்று பாரிமுனை,ராயபுரம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது, சென்னை கீழ்ப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், வேப்பேரி பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
கடலோர மாவட்டங்களில் மழை
நாளைய தினம் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 8ஆம் தேதியன்று கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
Recommended Video
லேசான மழை
9 ஆம் தேதி அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள் தென்மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும். வருகிற 10ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.