வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை
சென்னை: ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரியில் இடி மின்னலுடன் கூடிய இலேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் மாதத்தில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை பல இடங்களில் ஓய்ந்து விட்டது என்றாலும் அவ்வப்போது சில ஊர்களில் தூரலாக பெய்து வருகிறது.
பல மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வரும் நிலையில், 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரியில் இடி மின்னலுடன் கூடிய இலேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த அதிகபட்சமாக ஏற்காட்டில் 8 செ.மீ, கே. மாத்தூரில் 6 செ.மீ, நெய்வேலி மற்றும் வேப்பூரில் தலா 5 செ.மீ மழை பதிவாகி இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
அக்டோபர் 3 ஆம் தேதி அந்தமான் கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா கடலோர பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசகூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.