சென்னையில் கொட்டும் மழை... மறைந்த முதல்வர் கருணாநிதி வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர்
சென்னை: சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது 5 கிமீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது.
சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் பிற்பகல் முதல் விடாமல் மழை கொட்டி வருகிறது.
கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. அண்ணா சாலையில் ஏராளமான வாகனங்கள் தேங்கி நின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டனர்.
கனமழையின் காரணமாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் வீடு அமைந்துள்ள கோபாலபுரம் பகுதியில் சாலைகளில் ஆங்காங்கே வெள்ளநீர் தேங்கி நின்றது. தண்ணீர் வெளியேற முடியாமல் பள்ளமான பகுதிகளில் தேங்கி நின்ற மழைநீர் கருணாநிதியின் வீட்டிற்கு உள்ளே புகுந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சென்னையில் கடந்த 2015ஆம் அண்டு ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தின் போதும் கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்தது குறிப்பிடத்தக்கது.