தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை.... மக்கள் மகிழ்ச்சி
சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
வெப்ப சலனம் காரணமாக, அடுத்த 24 மணிநேரத்தில் உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதே நேரம், நாளை முதல் கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், திண்டுக்கல் மற்றும அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை, வெப்பத்தை தணித்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பலத்த காற்றினால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதே போல், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, நல்லாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம், அந்தூர், மேலமாத்தூர், கோனேரிப்பாளையம், ஆலாம்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மதுரையில் மாட்டுத்தாவணி, அண்ணாநகர், கோரிப்பாளையம், பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மிதமான மழை பெய்தது. புதுக்கோட்டை காமராஜபுரம், போஸ் நகர், மேட்டுப்பட்டி, கணக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலும் மழை பெய்தது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. கனமழை காரணமாக ஆண்டிப்பட்டியில் மின்சாரம் தடை செய்யப்பட்டது.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கினால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து, அதையொட்டியுள்ள தமிழக பகுதிகள் பயன் பெறும். முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அணைகளும், குமரி மாவட்டத்தின் நீராதாரங்களும் தென்மேற்குப் பருவமழையால் பயன்பெறும். கடந்த 4 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் சராசரியை விட குறைவாகவே மழை பதிவாகும் நிலையில், இந்தாண்டு, மாற்றம் என மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.