இந்த 14 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரங்களில் கன மழை வெளுக்கும்.. பாலச்சந்திரன் எச்சரிக்கை
Recommended Video
சென்னை: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என்று தென் மண்டல வானிலை துறை தலைவர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
சென்னையில் அவர் கூறியதாவது: தெற்கு ஆந்திரா மற்றும் அதனையொட்டியுள்ள வட தமிழக பகுதிகளில் வளிமண்டலத்தின் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில், அனேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது.
கனமழையை பொருத்தளவில் தமிழகப் பகுதிகளில், திருவள்ளூரில் 22 செ.மீ, பூண்டி 21 செ.மீ, அரக்கோணத்தில் 17 சென்டிமீட்டர், தாமரைபாக்கத்தில் 15 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
ஒரு நாளுக்கே தாங்க முடியலை.. சென்னையில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்.. நார்வே நாட்டு நற்செய்தி!
காஞ்சிபுரம் முதல் தேனி வரை
அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தின் பல பகுதிகளிலும், தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. கனமழையை பொருத்தளவில், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளன.
சென்னை மழை
சென்னையை பொருத்தளவில் இடைவெளி விட்டு சில நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கையை பொருத்தளவில், தென்கிழக்கு வங்க கடல் பகுதிக்கு அடுத்துவரும் இரு தினங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த மழை நிலவரம் தமிழக பகுதியில் அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கு தொடரும்.
மேக வெடிப்பு இல்லை
கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும்போது ஏற்படக்கூடிய மழைதான் இது. மேக வெடிப்பு என்பதெல்லாம் கிடையாது. இரவு நேரத்திற்கு மேல்தான் கன மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கும். இன்னும் தென்மேற்கு பருவ மழையே முடிவடையவில்லை எனவே வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பது தொடர்பாக பிறகுதான் தெரியும்.
நல்ல மழை
தென்மேற்கு பருவமழை பருவ காலத்தில் தமிழகத்தில் 32 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னையில் 50 செ.மீ. மழை பெய்துள்ளது. இது 29% அதிகம். எனவே இந்த வருடம் தென் மேற்கு பருவமழையால் தமிழகத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.