தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு.. இந்த 9 மாவட்டங்களிலும் நல்ல மழை இருக்கு
Recommended Video
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், ஈரோடு உள்பட 5 மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வளி மண்டல மேலடுக்கில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கோவை, விருதுநகர், மதுரை, நெல்லை, வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக தர்மபுரி கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மற்றும் நீலகிரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் ஓரிரு இடங்களில கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும், குறைந்த பட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் காணப்படும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல் பகுதியில் 10 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மைலாடு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரியில் தலா 8 செமீ மழை பெய்துள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாராபாளையம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் ஆகியி இடங்களில் 6 செ.மீ மழை பெய்துள்ளது இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.