சில்லென்ற மழையால் ஜில்லென மாறிய மாவட்டங்கள்.. நாளை தமிழகத்தில் இடிமழை இருக்காம்
சென்னை: சில்லென பெய்த மழையின் காரணமாக ஜில்லென மாறி உள்ளது தமிழகத்தின் தென் மாவட்டங்கள். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அனல் காற்று வீசி மக்களை புழுக்கதால் சூரிய பகவான் ஒரு பக்கம் நனைத்து வருகிறார். அதேநேரம் மாலை மங்கும் வேளைகளில், வருண பகவானின் ஓரக்கண் பார்வை தமிழகத்தின் சில இடங்களில் வீசி சென்றுவருவதால், மழை தேவதை ஆங்காங்கே பூமியை நனைத்து செல்வதோடு, மக்களின் இதயங்களையும் நனைத்து சென்று வருகிறாள்.
அப்படித்தான் தென்மாவட்டங்களில் மழை தேவதையின் வருகை இன்று அற்புதமான மேகங்களின் வரவேற்புடன் நிகழ்ந்தது. மரங்கள் வேகமாக ஆசைந்து ஆடி காற்றினை துயில்த்து எழ வைத்தன. காற்றுகள் ஓடி ஓடி ஒவ்வொரு வீட்டுக்கதவையும் தட்டிச் சென்றன. அதன் பின் மண்ணின் வாசனைக்கு மயங்கி மழை தேவதை தென் மாவட்டங்களை நனைத்து சென்றாள்.
பல வருடமாக கஷ்டப்பட்டு வேலை செஞ்சதெல்லாம் வீணாகிடுச்சே.. கமல் மீது கடும் கோபத்தில் நாம் தமிழர்
இதேபோல் நெல்லை மாவட்டம் தென்காசி, குற்றாலம், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், வடகரை உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணி நேரமாக பலத்த காற்றுடன் மழை கொட்டியது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியது.
மதுரையில் கோரிப்பாளையம், அண்ணா நகர், கே.கே.நகர், புதூர் உள்ளிட்ட பல இடங்களில் இன்று பரவலாக மழை பெய்தது. இதேபோல் தேனி மாவட்டம் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், கூடலூர் உள்ளிட்ட இடங்களில் சூறை காற்றுடன் இன்று மழை பெய்தது. கம்பம் அரகே நாராயணதேவன்பட்டியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதேபோல் நேற்று இரவு, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய உள்ளது. உள் மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு அனல் காற்று அதிகம் வீசுக்கூடும். வெப்பநிலை வழக்கத்தை விட நான்கில் இருந்து 6 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் பீளமேட்டில் 6 செ.மீ மழையும், பொள்ளாச்சி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டாபுரத்தில் தலா 5 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.