கன மழை.. பெருக்கெடுத்து வரும் வெள்ளம்.. செங்கல்பட்டு மாவட்டத்தில் உஷார் நிலை.. வெள்ள எச்சரிக்கை
சென்னை: கனமழை காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னை முதல் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வரை மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக ஆறுகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
பல பகுதிகளிலும் இருந்து மழை நீர் தாழ்வான பகுதிகளுக்கு பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் பத்திரமாக வெளியேற்றப்படக்கூடிய காட்சிகளையும் பார்க்க முடிகிறது.
ஈவு இரக்கமின்றி தடியடி நடத்துவதா? மேட்டுப்பாளையம் போலீசுக்கு தமிமுன் அன்சாரி கண்டனம்
இந்த நிலையில்தான், மழை, வெள்ளம் போன்ற காரணத்தால் செங்கல்பட்டில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட நிர்வாகம் இன்று மாலை பிறப்பித்துள்ளது. குருவன்மேடு, ரெட்டிபாளையம், பாலூர், ஆத்தூர், திம்மாவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு இந்த எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கிராமங்களில் வசிக்கக் கூடியவர்கள் பத்திரமாக வேறு பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர். இதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர்.