சென்னையில் இன்று காலையிலும் தொடர்ந்த சூப்பர் மழை.. சாலைகளில் வெள்ளம்.. மக்கள் குஷி.. டிராபிக் அவதி!
வானிலை ஆய்வு மையம் கணித்தபடியே செவ்வாய்கிழமை சென்னையில் மழை வெளுத்து வாங்கியது.
சென்னை: சென்னையில் நேற்று மாலையில் மழை வெளுத்து வாங்கியது. திடீரென கொட்டித்தீர்த்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்தது. இரவில் சிறிது நேரம் விட்டிருந்த மழை இரண்டாவது நாளாக இன்று காலை முதலே மழை பெய்யத் தொடங்கியுள்ளது. சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னை தவிர தஞ்சாவூர், திருவாரூர், மதுரை மாவட்டங்களிலும் காலை முதலே மழை பெய்து வருகிறது.
Recommended Video
தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் மழை பெய்வதால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.
சென்னையில் செவ்வாய்கிழமை மாலை நேரத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் குளிர்ந்த காற்று வீசியதில் கனமழை கொட்டித்தீர்த்தது. அடையாறு, நுங்கம்பாக்கம், சாலிகிராமம், வளசரவாக்கம், சென்னையின் புறநகர் பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழையால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
பலத்த சூறைக்காற்று,இடி மின்னலுடன் பெய்த மழையால் சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. ஹைதராபாத்திலிருந்து 220 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம்,மதுரையிலிருந்து 75 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம்,வாரணாசியிலிருந்து 78 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் ஆகிய 3 விமானங்கள் பலத்த மழை,சூறைக்காற்று காரணமாக சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
அதைப்போல் 45 பயணிகளுடன் டெல்லியிலிருந்து வந்த விமானமும்,69 பயணிகளுடன் தூத்துக்குடியிலிருந்து வந்த விமானமும் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானிலேயே நீண்ட நேரமாக வட்டமடித்தன.அதன் பின்னர் மாலை 5.30 மணிக்கு மேல் மழையின் வேகம் குறைந்ததும் சென்னையில் தரையிறங்கின. அதைப்போல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்ட 3 விமானங்களும் இரவு 7 மணிக்கு மேல் ஒன்றன்பின் ஒன்றாக சென்னைக்கு திரும்பி வந்தன.
இந்த மழை இன்றும் நீடிக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இதனையடுத்து காலை முதலே பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதே போல காலை முதலே தஞ்சாவூர், திருவாருர், மதுரை மாவட்டங்களில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் தென்தமிழகம், உள்மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி கரூர், திருச்சி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பின்னி பெடல் எடுத்த பேய்மழை- பல இடங்களில் குறைந்தபட்சமே 5 செ.மீ மழை!
தெற்கு வங்கக்கடல், குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை இரவு கடல் அலை 2.2 மீட்டர் முதல் 3.2 மீட்டர் வரை எழும்பக்கூடும் என்றும் வானிலை மைய எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.