சென்னையில் கன மழை.. விடிய விடிய பெய்தது.. சாலைகளில் ஒரே வெள்ளம்
சென்னை: சென்னையில் இரவு முதல் விடிய விடிய பல்வேறு இடங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
Recommended Video
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதன்கிழமை நள்ளிரவு மற்றும் வியாழக்கிழமையான இன்று அதிகாலை முதல் கன மழை கொட்டி தீர்த்தது.
கிண்டி, சைதாப்பேட்டை, பெரம்பூர், நுங்கம்பாக்கம், வளசரவாக்கம், கோயம்பேடு, மதுரவாயல் போன்ற பல பகுதிகளிலும் அதிகாலையில் கனமழை கொட்டியது.
வெள்ள நீர்
இன்று காலையிலும் கூட சென்னை நகரப் பகுதிகள் பலவற்றிலும் மழைப்பொழிவு இருந்தது. சாலைகளில் வெள்ளநீர் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்தை அனுபவிக்கின்றனர். இந்த மழை அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்துக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை பிறப்பித்துள்ளது.
வட கிழக்கு பருவமழை
தமிழகத்தில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிலையில் சென்னையில் இரவு முதல் கனமழை கொட்டித் தீர்க்க ஆரம்பித்துள்ளது.
சென்னை ஜில் ஜில்
இனிமேல் அடுத்தடுத்த நாட்களிலும் மழையின் தாக்கம் இருக்கக் கூடும் என்று தெரிகிறது. இதனிடையே இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக குளிரான தட்பவெப்பம் நிலவுவதால் மக்கள் கம்பளிகளுக்குள் அடைக்கலம் அடைந்துள்ளனர்.
வெள்ளம்
கடந்த சில நாட்கள் முன்பு பெய்த மழை, வெள்ளத்தால், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குள் கூட வெள்ளம் சென்றது. இப்போது மறுபடியும் வெள்ளக்காடாகியுள்ளது சென்னை. மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து இதை தடுக்க வேண்டும் என்கிறார்கள் பொது மக்கள்.