6 மணி நேரமாக விடுவேனா என்கிறது! நான்ஸ்டாப் மழை.. காஞ்சி, செங்கல்பட்டு மாவட்ட மக்கள் அவதி
செங்கல்பட்டு: காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கன மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு அதன் சுற்று வட்டார பகுதிகளான ஆத்தூர், வல்லம், திம்மாவரம், புலிப்பாக்கம், செட்டிப்புண்ணியம், ஆலப்பாக்கம், மெய்யூர் சிங்கபெருமாள்கோவில், உள்ளிட்ட பகுதியில் இன்னும் மழை விடாமல் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் மழை பெய்து வருகிறது.
சென்னையில் அதிகாலை முதல் மழை.. குளிரால் "உறைந்த" தலைநகரம்!
மகிழ்ச்சி
இதனால் கடும் குளிர் காற்று வீசி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் 5 நாட்கள் வட தமிழக மாவட்டங்களிலும் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
புரேவி புயல்
நிவர், புரேவி புயலால் கன மழை பெய்து கடந்த சில வாரங்களாக ஓய்ந்திருந்த நிலையில் வரும் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பின்படி அதிகாலை முதலே வானம் மேக மூட்டமாக இந்த நிலையில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
ஓரிக்கை
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், சுங்குவார்சத்திரம், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர்.
இடைவிடாமல் பெய்யும் மழை
தொடர்ந்து 6 மணி நேரமாக மழை விடாமல் பெய்து வருவதால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ,வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மேடு பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் அச்சத்துடனேயே சாலையை கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.