சென்னை, மதுரையில் கொட்டித்தீர்த்த மழையால் குளிர்ந்த பூமி - இன்றும் கனமழை எச்சரிக்கை
சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இடியும் மின்னலுமாய் மழை பெய்ய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
சென்னை: சென்னையில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி எடுத்த நிலையில் வியாழக்கிழமை மாலையில் இருந்தே வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. இரவு நேரத்தில் சாரலுடன் ஆரம்பித்து விடிய விடிய இடியும் மின்னலுமாய் கனமழை கொட்டியது. சென்னைவாசிகள் இடிச்சத்தத்தை கேட்டுத்தான் வெள்ளிக்கிழமை கண்விழித்தனர். மழை இன்றும் பல மாவட்டங்களில் நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்திருந்தது. வானிலை மையம் கணித்தது போலவே தற்போது பலித்திருக்கிறது.
அரசியல் தொடர்பு.. ஜாதி கொலை.. உ.பியின் "ராஜனாக" உருவெடுத்த விகாஸ் துபே.. புதுப்பேட்டை ஸ்டைல் வரலாறு!
விடிய விடிய கனமழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. தென் சென்னை பகுதிகளான கிண்டி, சைதாப்பேட்டையிலும் பல்லாவரம், தாம்பரம், சேலையூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி என புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்தது.
பெருக்கெடுத்த வெள்ளம்
வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த சென்னை புறநகர் வாசிகள் தற்போது பெய்த மழையால் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை மீனம்பாக்கம் பகுதியில் 11 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. சென்னையில் நுங்கம்பாக்கம், ரெட்ஹில்ஸ், எண்ணூர் துறைமுகம் பகுதியிலும் 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
மழையால் நனைந்த காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்திலும் கன மழை கொட்டித்தீர்த்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரிலும் 11 செமீ மழை பதிவாகியுள்ளது. கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது.
எங்கெங்கு எவ்வளவு மழை
மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் நேற்று நல்ல மழை பெய்துள்ளது. வேலூரில் 12 செமீ மழையும், திண்டுக்கல்லில் 6 செமீ மழையும், மதுரை, புதுச்சேரியில் 2 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
Recommended Video
வெளுத்து வாங்கப்போகுது மழை
இன்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும், காரைக்கால்,புதுச்சேரியிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் தனது கணிப்பில் ஜூலை 12ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்று கணித்திருக்கிறது. இந்த ஆண்டு பருவமழையால் நீர் நிலைகள் நிரம்பி தண்ணீர் பஞ்சம் வர வாய்ப்பு இல்லை என்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.