திருச்சியில் வெளுத்துக்கட்டிய மழை பெருக்கெடுத்த வெள்ளம் - இன்னும் சில நாட்கள் மழை நீடிக்கும்
வானிலை ஆய்வு மையம் கணித்தபடியே சனிக்கிழமை தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இடியும் மின்னலுமாய் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.
சென்னை: தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் மழை பெய்வதால் பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் தெரிவதில்லை. சனிக்கிழமை பிற்பகல் முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் குளிர்ந்த காற்று வீசியதில் கனமழை கொட்டித்தீர்த்தது. திருச்சி, மதுரை புறநகர் பகுதிகளில் வெளுத்துக்கட்டிய மழையால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த மழை இன்றும் நீடிக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
Recommended Video
கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதியானது தமிழகத்தின் வளிமண்டல மேலடுக்கில் நிலவுகிறது, இதன்காரணமாக தமிழகத்தில் கோவை, நீலகிரி, தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதே போல புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
வானிலை மையம் கணித்தது போலவே டெல்டா மாவட்டங்களில் இடியும் மின்னலுமாய் மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், முக்கொம்பு, திருவானைக்காவல், மணச்சநல்லூர், தில்லைநகர், வயலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இன்று முழு லாக்டவுன் - சாலைகள் வெறிச்சோடினா
திடீரென்று கொட்டித்தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் திருச்சியில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை இன்றும் நீடிக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
ஞாயிறன்று சேலம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
ஜூலை 15ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடன் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.