சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்
Recommended Video
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே ஆகஸ்டு மாதத்தில் சராசரி அளவை ஒப்பிடும் போது, 99 சதவீதம் வரை மழை பெய்யலாம் என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை சராசரியை ஒட்டியே இருக்கும். சராசரியில் இருந்து 94 சதவீதம் முதல் 106 சதவீதம் வரை மழை பெய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை ரயின்ஸ் என்ற தனியார் இணையதளம் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, ஆகஸ்ட் முதல் வாரத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மந்தமான வானிலை காணப்பபடும் என தெரிவித்துள்ளது. கேரளா மற்றும் கர்நாடகாவில் மட்டுமே தென்மேற்குப் பருவமழை தாக்கம் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் இது தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிர பகுதிகளில் நகரக்கூடும். எனவே தமிழகத்தில் பெரிதாக மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.