புயல் வலுவிழக்கும்... தென் மாவட்டங்களில் 5 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை
தமிழக தென் மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களிலும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. நாளைய தினம் 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வட மாவட்டங்களில் சற்றே ஓய்ந்திருந்தாலும் தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டம் எடப்பாடி நாமக்கல் மாவட்டம் மோகனூரில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 8 செமீ மழை பதிவாகியுள்ளது. மேட்டூரில் 7 செமீ மழையும் கரூரில் 6 செமீ மழையும் பதிவாகியுள்ளது. திருச்செங்கோடு (நாமக்கல்), ராசிபுரம் (நாமக்கல்), சேலம் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது. நாகர்கோயில், சிவகாசியில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது. வாடிப்பட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் தலா 3 செமீ பதிவாகியுள்ளது. இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
நெல்லை, குமரியில் கனமழை...6 மணி நேரத்தில் புயல் உருவாகும் - 90 கிமீ வேகத்தில் காற்று வீசுமாம்
தென் மாவட்டங்களில் கனமழை
நாளைய தினம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தென்காசி, திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள்
நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
கனமழை
7ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 8ஆம் தேதியன்று தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
புயல் வலுவிழக்கும்
மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒரிசா கடற்கரையோரம் நிலைகொள்ளும். இதன் காரணமாக இன்றைய தினம் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளைய தினம் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, ஆந்திரா மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.