அதிதீவிர கனமழை.... ஆறுகளில் பெருகும் வெள்ளம் - நீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட்
நீலகிரி மாவட்டத்தில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ரெட் அலர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் கன மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்றின் மலைச்சரிவு மழைப்பொழிவு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. அணைகள் நிரம்பியுள்ளன.
இந்த நிலையில் இன்றும் நாளையும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை அதிதீவிர கனமழையாக நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - ரெட் அலர்ட் கொடுத்த இந்திய வானிலை
நீலகிரிக்கு ரெட் அலர்ட்
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பருவக்காற்றின் மலைச்சரிவு மழைப்பொழிவு (oragrapic rainfall) காரணமாக நீலகிரி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் அதிதீவிர கனமழை தொடரும்.
மழை நீடிக்கும்
கோவை மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் கனமழை முதல் அதிதீவிர கனமழையும் பெய்யும். தேனி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் கனமழையும் பெய்யும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நெல்லை, குமரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எங்கெங்கு எவ்வளவு மழை
செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கன மழை நீடிக்கும் என்று தெரிவித்தார். கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் மேல்பவானியில் 31 செமீ மழை பதிவாகியுள்ளது. அவலாஞ்சியில் 22 செமீ மழை பதிவாகியுள்ளது. மேல் கூடலூரில் 20 செமீ மழையும், வால்பாறையில் 19 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
சூறாவளி காற்று எச்சரிக்கை
மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா கடலோட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் புவியரசன் கூறியுள்ளார்.