சென்னையில் கனமழை.. ஆரம்பமே அசத்தல்.. அடுத்த சில நாட்களுக்கு கனமழையை சந்திக்கவுள்ள தலைநகர்!
சென்னை: வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கிய நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழை மேலும் தீவிரமடையும் என்றே தெரிகிறது.
Recommended Video
தமிழகத்திற்கு பலனை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை காலம் இன்று தொடங்கியது. ஆரம்பமே அசத்தலாக நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இந்திய வானிலை மையம் தெரிவிக்கையில் சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கன மழை.. மஞ்சள் அலர்ட் பிறப்பித்த இந்திய வானிலை ஆய்வு மையம்
நுங்கம்பாக்கம்
அது போல் சென்னையில் புதன்கிழமை இரவும் வியாழக்கிழமை காலையும் இடியுடன் கூடிய கனமழை கொட்டியதாக வானிலை மையங்கள் பதிவு செய்துள்ளன. நுங்கம்பாக்கத்தில் இன்று காலை 8.30 மணியுடன் 13 செமீ மழை பதிவாகியுள்ளது.
மீனம்பாக்கம்
அது போல் அண்ணா பல்கலைக்கழகத்தில் 13.4 செ.மீ. மழையும் எண்ணூரில் 8 செ.மீ மழையும், செங்குன்றத்தில் 13 செ.மீ. மழையும் சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 6 செமீ மழையும் மீனம்பாக்கத்தில் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
தமிழக கடலோரம்
இதுகுறித்து வானிலை மைய துணை இயக்குநர் எஸ் பாலசந்திரன் கூறுகையில் தமிழக கடலோரத்தை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி காரணமாக இடி, மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. வடகிழக்கு காற்றின் ஈரப்பதத்தால் கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.
பருவமழை
மேலும் அடுத்த சில நாட்களுக்கு சென்னையில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளார். நேற்று பெய்த மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காட்சியளிக்கிறது. இந்த வடகிழக்கு பருவமழையில் இரு புயல்கள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.