வளிமண்டல சுழற்சியால் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்: வானிலை மையம்
சென்னை: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வளிமண்டல சுழற்சியாக நிலை கொண்டிருப்பதால் தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே இடத்தில் வளிமண்டல சுழற்சியாக நிலை கொண்டுள்ளது. இதன் கரணமாக இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னை, தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்களில் செம மழை
தமிழகம், புதுவையில் நாளையும் மழை
நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னையில் லேசானது முதல் மிதமான மழை
சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிக்ரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்
அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்.
கடந்த 24 மணிநேர மழை விவரம்
கடந்த 24 மணிநேரத்தில் தூத்துக்குடி மணியாச்சியில் 16 செ.மீ, வைப்பாரில் 12 செ.மீ, கடம்பூரில் 11 செ.மீ மழை பெய்துள்ளது. சீர்காழி, காரைக்கால், கன்னியாகுமரி சித்தாரில் தலா 9 செ.மீ மழை பெய்துள்ளது. நாகை தலைஞாயிறு, மயிலாடுதுறை, ராமநாதபுரம் வாலிநோக்கம், திருவாரூர் நீடாமங்கலத்தில் தலா 8 செ.மீ மழை பதிவாகி உள்ளது. திருவாரூர் குடவாசல், நாகை மணல்மேடு, நெல்லை பாளையங்கோட்டையில் தலா 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.