வெள்ளி,சனியில் மிக கனமழை..மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு வார்னிங்..சென்னைக்கு கனமழை எச்சரிக்கை
Recommended Video
சென்னை: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறுகையில், "வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை உள்மாவட்டங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காணப்படுகிறது.
இதன் காரணமாக அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழை நீடிக்கும். சென்னை, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்த வரை மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸூம், குறைந்த பட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸூம் பதிவாகும்.
தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, நெல்லை, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் வெள்ளி மற்றும் சனி, கிழமைகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது." என்றார்.