சுட்டெரிக்கிறது வெயில்… தலைநகரில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் அபாயம்
சென்னை: கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பாகவே சென்னையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்திரி வெயில் இன்னும் ஆரம்பிக்க ஒன்றரை மாதங்கள் இருக்கும் நிலையில், குறிப்பாக தலைநகர் சென்னையில் வெயிலின் தாக்கம் என்பது சற்று அதிகமாக உள்ளது .
இதனால், மதிய நேரங்களில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
மழை பொய்த்தது
கடந்த 2017-ம் ஆண்டு பருவமழையுடன் ஒப்பிடுகையில் 2018ம் ஆண்டு இறுதியில் பருவமழை பொய்த்து விட்டதன் காரணமாக இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
விற்பனை ஜோர்
தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் சதம் போட்டு வருகிறது. மதிய நேரத்தில் வெயிலின் தாக்கத்தை தீர்த்துக் கொள்வதற்காக பொதுமக்கள் சாலையோரங்களில் உள்ள குளிர்பான கடைகள் மற்றும் தர்பூசணி கடைகளுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர் . இதனால் வியாபாரம் களை கட்ட தொடங்கியுள்ளது
குடிநீர் தட்டுப்பாடு
வெயிலின் தாக்கம் ஒருபுறமிருக்க மற்றொரு பக்கம் குடிநீர் தட்டுப்பாடும் தலை விரித்து ஆட தொடங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் தண்ணீர் கிடைக்காமல் ஆழ்துளை கிணறு இன்னும் பல அடிகளுக்கு தோண்டப்பட்டு வருகிறது. அதேநேரம் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் நீர் மட்டமும் சரசரவென குறைந்து வருகிறது. இதனால் கோடை காலத்தை சமாளிப்பது எப்படி என்று தெரியாமல் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
மக்கள் எதிர்பார்ப்பு
ஏப்ரல் , மே மாதங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் உக்கிரமாக இருக்கும் என்பதால், வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்தால் மனதிற்கு இதமாகும் என்று மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் .