சென்னை உள்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம்
சென்னை: வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புவியரசன் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவ மழை தொடங்கி நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று காலை வரை கனமழை பெய்தது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வ மைய இயக்குனர் புவியரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில். வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்திருக்கிறது.
தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளது. மாலத்தீவு மற்றும் கேரள கடலோரப் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோல் விழுப்புரம், கடலூர், தூத்துக்குடி, நீலகிரி, நெல்லை, கோவை, திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அதிகபட்சமாக 14 செ.மீ மழை பொழிந்துள்ளது. கன்னியாகுமரி, கொடைக்கானலில் தலா 13 செ.மீ,, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 12 செ.மீ, திருவாரூரில் 9 செ.மீ, மாமல்லபுரத்தில் 7 செ.மீ மழை பெய்துள்ளது" இவ்வாறு கூறினார்.