விடுமுறை ஓவர்.. சொந்த ஊர்களிலிருந்து, சென்னை, பெங்களூர் திரும்பிய மக்கள்.. டோல்கேட்களில் டிராபிக்
Recommended Video
சென்னை: தசரா விடுமுறை முடிவடைந்து உள்ள நிலையில் இன்று மக்கள் தங்களது சொந்த ஊர்களிலிருந்து சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களுக்கு, திரும்பி வருவதால் நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆயுதபூஜை, விஜயதசமி போன்ற பண்டிகைகளை தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை முதல் விடுமுறை காலம் துவங்கியது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முடித்துக்கொண்டு பணி நாளான இன்று அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் நோக்கத்தில் சொந்த ஊருக்கு சென்ற மக்கள் சென்னை, பெங்களூர், கோவை போன்ற தாங்கள் வாழும் இடங்களுக்கு திரும்பத் தொடங்கினர்.
சொந்த வாகனங்கள் வைத்துள்ளார் நேற்று மதியம் முதலே சொந்த ஊர்களில் இருந்து கிளம்பி இந்த நகரங்களுக்கு திரும்பினர். இதன் காரணமாக, கிருஷ்ணகிரி-பெங்களூர் நடுவேயான நெடுஞ்சாலையில் உள்ள சுங்க சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.
[இனி இப்படித்தான்.. சென்னை உள்ளிட்ட நகரங்களில் 5வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைந்தது]
சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டதை கவனிக்க முடிந்தது. இருப்பினும் நகர்ப்புறங்களில் ஏற்படும் டிராபிக் நெரிசலை போன்று டோல்கேட் பகுதிகளிலும் டிராபிக் நெரிசல் இருந்ததால் பயணிகள் அவதிப்பட்டனர்.
இதேபோல சென்னை வரும் சாலையில், சமயபுரம் சுங்கசாவடி துவங்கி சென்னை வரையில் ஆங்காங்கு கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
இன்று, அதிகாலையும் போக்குவரத்து நெரிசலை பார்க்க முடிந்தது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டதாக கோயம்பேடு காவல்துறை உதவி ஆய்வாளர் ஜான் சுந்தர் தெரிவித்துள்ளார். கோயம்பேடு பகுதியில், 14 டிராபிக் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 300 போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.