இரவு முதல் பெய்யும் மழை.. சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்.. வாகன ஓட்டிகள் அவதி!
சென்னை: சென்னையில் இரவு முதல் பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னையின் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாடு ஓரளவுக்கு சீரானது.
இந்நிலையில் நேற்றிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியிருப்பதால் நகரின் முக்கிய இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், பூவிருந்தவல்லி, கிண்டி, கீழ்ப்பாக்கம், போரூர், வடபழனி உள்ளிட்ட இடங்களில் கடுமையான நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ராமாபுரம், அசோக் நகர், ஐய்யப்பன் தாங்கல், புரசைவாக்கம் ஆகிய இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.