ஆம்பன் புயல் ஆவேசம்.. ஓடிக் கொண்டிருந்த பஸ்சை அப்படியே பின்னோக்கி இழுத்துச் சென்றது.. திக் வீடியோ
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆம்பன் புயல் (cyclone amphan) அதி தீவிர புயலாக இன்று காலை உருமாற்றம் அடைந்தது. வரும் 20ஆம் தேதி இது மேற்கு வங்க மாநிலத்தில் கரையை கடக்க கூடும் என்று சொல்லப்படுகிறது.
Recommended Video
ஆம்பன் புயல் கடந்த சனிக்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற நிலையிலிருந்து புரமோஷன் பெற்று, புயலாக உருவெடுத்தது. அதற்கு பிறகு காற்றில் அதன் சுழற்சி வேகம் என்பது அதிகரித்தபடி இருக்கிறது.
இந்த புயல்சின்னம், வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், காற்றின் சுழற்சியால், அரபிக் கடலில் உள்ள ஈரப்பதம் மிக்க காற்றை இழுத்துக் கொண்டே இருக்கிறது. இதனால் மேற்கு கடற்கரைப் பகுதியிலிருந்து காற்று, வங்கக் கடல் பகுதியை நோக்கி இழுக்கப்படுவதால் இடையில் உள்ள மாவட்ட பகுதிகளில் மழை பெய்கிறது.
"சூப்பர் புயலாக மாறும் ஆம்பன்".. தமிழகத்திற்கு காத்திருக்கும் செம மழை.. எங்கெல்லாம் பெய்யும்?
பல பகுதிகளில் மழை
கர்நாடக கடலோர மாவட்டமான மங்களூர், மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள், குடகு, ஷிமோகா உள்ளிட்டவற்றிலும், தென் கர்நாடக மாவட்டங்களான பெங்களூர், மண்டியா, மைசூரு, ராமநகர் உள்ளிட்டவற்றிலும் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இன்றும் இதமான சூழல் நிலவிவருகிறது. தமிழகத்திலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
தூரத்திலுள்ள புயல்
எங்கோ, வங்க கடலில் புயல் இருந்தாலும் கூட, பல கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தெற்கு கர்நாடகா, வடக்கு தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்டவற்றில் சூறாவளி காற்று சுழன்று அடித்ததை பார்க்க முடிந்தது. இந்த காற்றின் வேகம், தெலுங்கானா, ஒடிசா போன்ற மாநிலங்களில் இன்னமும் அதிகமாக இருக்கிறது.
காற்றால் இழுக்கப்படும் பஸ்
தெலுங்கானா மாநிலம் கம்மம் என்ற பகுதியில் ஓடிக்கொண்டு இருந்த ஒரு தனியார் சொகுசுப் பேருந்து, கடும் சூறாவளி காற்றின் காரணமாக பின்னோக்கி இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ செல்போனில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.
கரையை கடக்கும்போது எச்சரிக்கை
ஆம்பன் புயல், சென்னைக்கு தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை பெற்றிருக்கும் நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் இந்த அளவுக்கு மோசமான சூறாவளி வீசி இருக்கிறது என்றால், அது கரையை கடக்கும் போது எந்த மாதிரி சேதங்களை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே புயலை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் தெலுங்கானா மாநில அரசுகள் எடுத்துள்ளன. இந்த புயல் தமிழகத்தில் கரையை கடக்காது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.