ஸ்டாலினுக்கு போன் போட்ட ஹேமந்த் சோரன்.. பதவியேற்பு விழாவுக்கு நீங்க வந்தேயாகனும்.. அழைப்பு
சென்னை: ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்கும் விழாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தல்களில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி 47 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தது.
இதையடுத்து, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் வரும் 29ஆம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார். இது தொடர்பாக ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஹேமந்த் சோரன், தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
சமீபத்தில் மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கூட்டணிகள் இணைந்து ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தன. சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றார்.
அப்போதும், திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று அவரும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றார்.
இப்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்தும் ஸ்டாலினுக்கு அழைப்பு வந்துள்ளது. இதன் மூலம் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு திமுக தலைவராக பதவிக்கு வந்த ஸ்டாலினுக்கு, தேசிய அளவில் பல கட்சிகளும் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது என்பது கவனிக்கத் தக்கதாக இருக்கிறது. இந்த வகையில் அவர் தனது தந்தையின் புகழை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது, என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.