பழைய நோட்டுக்களில் சொத்து வாங்கியது போக.. மீதி பணத்தை சசிகலா மாற்றியது எப்படி?
சென்னை: பழைய ரூ 500, ரூ 1000 நோட்டுக்களை மாற்றுவதற்காக அரசு ஒப்பந்ததாரர்களுக்கு ரூ 237 கோடி ரூபாயை கடனாக சசிகலா கொடுத்ததாக வருமான வரித் துறை விசாரணையில் தெரியவந்தது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி ரூ 500, ரூ 1000 ஆகிய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவோ அந்த பழைய ரூபாய் நோட்டுகளை வைத்து ரூ 1674.5 கோடி மதிப்பிலான சொத்துகளை வாங்கி குவித்தது தெரியவந்ததாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
சசிகலா வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு துண்டுச் சீட்டுதான் இதை காட்டிக் கொடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற போது கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி சசிகலாவின் குடும்பத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரிச் சோதனை நடைபெற்றது. 187 இடங்களில் , 1800 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
சொத்துகளை வாங்கி குவித்தது
அப்போது விசாரணை வளையத்தில் சிக்கிய சசிகலாவின் உறவினர் கிருஷ்ணப்பிரியாவின் செல்போனில் ஒரு துண்டு சீட்டின் படம் இருந்தது. அந்த துண்டு சீட்டு குறித்து விசாரித்த போது தான் அவர் சொத்துகளை வாங்கி குவித்தது பற்றிய விவரங்கள் என தெரியவந்தது. விசாரணையில் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரையில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளார்.
168 கோடி
அதன்படி புதுவை ரிசார்ட்டை ரூ 168 கோடிக்கு விலை பேசி ரூ 148 கோடி மதிப்பிலான ரூ 500 பழைய நோட்டுகளை கொடுத்துள்ளார். ரூ 97 கோடியை வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுக்காக ரிசார்ட் உரிமையாளர் மாற்றியுள்ளார். பழைய மகாபலிபுர சாலையில் ஐடி நிறுவனத்தை ரூ 115 கோடிக்கு பேரம் பேசியுள்ளார். அதுவும் பழைய நோட்டுக்களையே கொடுத்துள்ளார்.
உறவினர்
ரூ 6 கோடியை வங்கியிலும் மீதமுள்ள பணத்தை 7 பேருக்கு அனுப்பி அதை புதிய நோட்டுகளாக மாற்றியுள்ளார் ஐடி உரிமையாளர். அது போல் சென்னையில் வணிக வளாகங்கள், பேப்பர் மில், சர்க்கரை ஆலைகள், காற்றாலைகள் ஆகியவற்றையும் வாங்கியுள்ளார். இதற்கான பணப்பரிமாற்றங்களை அவரது உறவினர் சிவக்குமார் மூலம் நடைபெற்றது தெரியவந்தது.
அரசு ஒப்பந்ததாரர்கள்
பழைய நோட்டுக்களில் சொத்துகள் வாங்கியது அல்லாமல் இன்னொரு வழியிலும் அந்த நோட்டுக்களை மாற்றியுள்ளார். பொதுவாக அரசு ஒப்பந்ததாரர்கள் தங்கள் தொழிலுக்கு முன்பணத்தை கடனாக பெறுவது உண்டு. அந்த வகையில் சசிகலா அரசு ஒப்பந்ததாரர்களுக்கு ரூ 237 கோடியை கடனாக கொடுத்துள்ளார்.
பிரபல நாளிதழ்
அதற்காக ரூ 7 கோடி கமிஷனாகவும் பெறப்பட்டது. இந்த பணம் ஒப்பந்ததாரர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு பினாமிகள் மூலம் புதிய பணமாக மாற்றப்பட்டது. 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 29-ஆம் தேதி 101 கோடி ரூபாயும், அடுத்த நாள் 135 கோடி ரூபாயும் பெறப்பட்டுள்ளது. இவற்றை வருமான வரித் துறை வெளியிட்டுள்ளதாக பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.