தமிழகத்தில் நவம்பர் 10-ஆம் தேதி முதல் தியேட்டர்கள், பொழுதுப்போக்கு பூங்காக்களுக்கு அனுமதி
சென்னை: தமிழகத்தில் நவம்பர் 10-ஆம் தேதி முதல் தியேட்டர்களுக்கு 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் வழங்கப்படுகிறது.
பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு,ம் நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் நவ. 30 வரை ஊரடங்கு.. 16-ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் இயங்க அனுமதி
12-ஆம் வகுப்பு
9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் நவம்பர் 16-ஆம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணியாளர்கள் விடுதிகள் உள்பட அனைத்து விடுதிகளும் நவம்பர் 16-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.
கோயம்பேடு வணிக வளாகம்
கோயம்பேடு வணிக வளாகம்: தற்காலிக இடத்தில் தற்போது செயல்படும் பழக்கடை மொத்த வியாபாரம், நவம்பர் 2-ஆம் தேதி முதலும் பழம் மற்றும் காய்கறி சில்லரை வியாபாரக் கடைகள் மூன்று கட்டங்களாக நவம்பர் 16-ஆம் தேதி முதலும் கோயம்பேடு அங்காடி வளாகத்தில் அரசால் வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
புறநகர் மின்சார ரயில்
பொதுமக்களுக்கான புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து சேவை மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது. சின்னத்திரை உள்பட திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உள்பட்டு ஒரே சமயத்தில் 150 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின்போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
நவம்பர் 10 முதல் தியேட்டர்கள்
திரையரங்கு உரிமையாளர்களிடமிருந்து திரையரங்குகளைத் திறக்க வரப்பெற்ற கோரிக்கைகளை பரிசீலனை செய்து தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் அரசால் வெளியிடப்படவுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும் பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவற்றை திரையிட்டும், ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உள்பட அனைத்து திரையரங்குகளும் 50 சதவீதம் இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி நவம்பர் 10-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
பொழுதுபோக்கு கலாச்சார நிகழ்வுகள்
மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை தொடர்பான கூட்டங்கள் நவம்பர் 16-ஆம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 100 நபர்கள் பங்கேற்கும் வகையில் நடத்த அனுமதிக்கப்படுகிறது.
100 பேருக்கு அனுமதி
பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நவம்பர் 10-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, திருமண நிகழ்வுகளுக்கு 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களுக்கு 100 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
உடற்பயிற்சிக் கூடங்கள்
ஏற்கெனவே 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் உடற்பயிற்சிக் கூடங்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நவம்பர் 1-ஆம் தேதி முதல் 60 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்கலாம். தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.