அத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி!
Recommended Video
சென்னை: இன்றைய தினம் பெருமாளுக்கு உகந்த நாள் என்பதாலும் மோடி வருகையால் தரிசனம் ரத்து என்ற வதந்தியாலும் அத்திவரதரை தரிசிக்க இரண்டரை லட்சம் பேர் ஒரே நேரத்தில் திரண்டதே காஞ்சிபுரத்தில் 4 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சோக சம்பவத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் குளத்தில் இருந்து எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். கடந்த 1-ஆம் தேதி முதல் தொடங்கிய இந்த வைபவத்தை இதுவரை 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டு களித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று அத்திவரதரை தரிசிக்க வந்த 4 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சோக சம்பவம் நடந்தேறியுள்ளது. மேலும் காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிக்கு திரண்ட மக்கள்
இதற்கு காரணம் என்னவெனில் இன்று திருவோணம் நட்சத்திரம் என்பதாலும் அது பெருமாளுக்கு உகந்த நாள் என்பதாலும் காஞ்சிபுரத்துக்கு ஏராளமானோர் திரண்டனர்.
பயணிகள்
கூட்ட நெரிசலால் பேருந்துகளும் தற்காலிக பேருந்து நிலையத்துக்கு செல்ல முடியாமல் மூங்கில் மண்டபம் நிறுத்தத்திலேயே பயணிகளை இறக்கவிட்டன. இதையடுத்து அங்கிருந்கு கோயிலுக்கு ஏராளமானோர் நடந்தே சென்றனர்.
கூட்ட நெரிசல்
இந்த நிலையில் அத்திவரதரை தரிசிக்க பிரதமர் மோடி அடுத்த வாரம் வருகை தரவுள்ளதாலும் அதையொட்டி 2 நாட்களுக்கு பொது தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும் வதந்தி பரவியதே இன்று ஒரே நாளில் கூட்ட நெரிசலுக்கு காரணம் என கூறப்படுகிறது.
விரட்டி அடித்த போலீஸ்
இந்த கூட்டத்தால் காஞ்சிபுரம் தெற்கு மாட வீதியில் இன்று காலை முதலே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வரிசையையும் தாண்டி பக்தர்கள் சென்றதால் போலீஸார் அவர்களை விரட்டி அடித்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா கூறுகையில் மோடி வருகையால் பொது தரிசனம் ரத்து என்ற தகவல் வதந்தியாகும். மக்கள் யாரும் வதந்திகளை நம்பாதீர் என தெரிவித்தார்.